துபாய்: இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான் ஆட்டமிழந்த விதம் குறித்து ஏற்கனவே பெரும் விவாதம் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, இந்த சர்ச்சையில் ஐபிஎல் தொடரை இழுத்து விட்டுள்ளார். அம்பயரின் நேர்மைத் தன்மையை கேள்வி கேட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான சூப்பர் ஃபோர் போட்டியில், ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ஃபக்கர் ஜமான் கொடுத்த 'கேட்ச்'சை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பிடித்தார். ஆனால், பந்து சாம்சன்-இன் கைகளுக்குள் செல்வதற்கு முன்பு தரையில் பட்டது போலத் தெரிந்ததால், இந்த முடிவு மூன்றாவது நடுவருக்கு அனுப்பப்பட்டது. பலமுறை 'ரீப்ளே'களைப் பார்த்த மூன்றாவது நடுவர் ருசிர பள்ளியகுருகே, இறுதியில் ஃபக்கருக்கு 'அவுட்' கொடுத்தார். இந்தத் தீர்ப்பு பாகிஸ்தான் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய ஷாஹித் அஃப்ரிடி, தனது பாணியில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். மூன்றாவது நடுவர் இந்தியாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்ததற்குக் காரணம், அவர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் அம்பயரிங் செய்யும் நோக்கத்தில்தான் என்று அவர் குற்றம் சாட்டினார்.
சமா தொலைக்காட்சி விவாதத்தில் அஃப்ரிடி கூறுகையில், "அவர் ஐபிஎல்-லும் அம்பயரிங் செய்ய வேண்டும் அல்லவா?" என்று கூறி, நடுவர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டதாக மறைமுகமாகத் தெரிவித்தார். அதாவது ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக செயல்பட்டால் ஐபிஎல் தொடரில் அம்பயர் பணிக்கு அழைக்க மாட்டார்கள் என்பதால் மூன்றாவது நடுவர் ருசிர பள்ளியகுருகே இந்தியாவுக்கு சாதகமாக முடிவை சொன்னார் என்பதே ஷாஹித் அஃப்ரிடி கூறி இருக்கிறார்.
அதே விவாதத்தில் கலந்துகொண்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப்-பும், அஃப்ரிடியின் கருத்தை ஆமோதித்தார். "அவர்கள் பல கோணங்களில் சோதிக்கவே இல்லை. ஃபக்கர் முதல் ஓவரிலேயே பும்ராவை எளிதாக எதிர்கொண்டு மூன்று பவுண்டரிகளை அடித்திருந்தார். அவரது விக்கெட் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது" என்று யூசுப் கூறினார். முன்னதாக, சோயிப் அக்தர்-உம், "26 கேமராக்கள் இருந்தும், மூன்றாவது நடுவர் ஏன் இரண்டு கோணங்களை மட்டும் பார்த்தார்? ஃபக்கர் அவுட் இல்லை" என்று தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர்களின் கருத்துகளோடு இந்த சர்ச்சை நிற்கவில்லை. பாகிஸ்தான் அணி நிர்வாகம் இந்த விஷயத்தை அதிகாரப்பூர்வமாகவே கையில் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் மேலாளர் நவீத் அக்ரம் சீமா, போட்டி நடுவர் மற்றும் அம்பயர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அதிகாரப்பூர்வ புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஃபக்கர் ஜமானுக்கு 'அவுட்' கொடுப்பதற்கு முன்பு, முடிவெடுக்கும் செயல்பாட்டில் நடந்த தவறுகளை அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"கிடைத்த ஆதாரங்கள், ஃபக்கருக்கு 'அவுட்' கொடுக்கும் அளவிற்கு 'தெளிவான மற்றும் முடிவானதாக' இல்லை. சந்தேகம் இருந்தபோதிலும், நடுவரின் முடிவு 'ஃபீல்டிங்' அணிக்குச் சாதகமாகவே இருந்தது" என்று பாகிஸ்தான் நிர்வாகம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.