அகமதாபாத்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பவுலிங் ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் வெறும் 2 ஓவர்களை மட்டுமே வீசி இருப்பது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
அகமதாபாத் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டிக்கான பந்துவீச்சாளர்களில் அஸ்வின் அல்லது முகமது ஷமி களமிறங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ஷர்துல் தாக்கூருடன் ரோகித் சர்மா களமிறங்கினார்.

அதேபோல் அகமதாபாத் மைதானம் பிளாட் பிட்ச் என்பதால், 2 ஸ்பின்னர்கள் போதும் என்று இந்திய அணி தரப்பில் முடிவு செய்யப்பட்டதாக பார்க்கப்பட்டது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. அதன்பின் பாகிஸ்தான் அணிக்கே உரித்தான ஸ்டைலில் அத்தனை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் பவுலர்களான முகமது சிராஜ், பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதில் நம்பர் 8 வீரராக சேர்க்கப்பட்ட பவுலிங் ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் வெறும் 2 ஓவர்களை மட்டுமே வீசியுள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் வெறும் 2 ஓவர்களை வீசி 12 ரன்களை ஷர்துல் தாக்கூர் விட்டுக் கொடுத்துள்ளார். இந்த இரு ஓவர்களும் ஆட்டத்தின் தொடக்க நிலையில் வீசப்பட்டதாகும். பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் - ரிஸ்வான் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த போது கூட கேப்டன் ரோகித் சர்மா ஷர்துல் தாக்கூர் கைகளில் பந்தை கொடுக்கவில்லை.
இதனால் ஷர்துல் தாக்கூர் தேர்வு தேவையில்லாத ஒன்றாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினையே சேர்த்திருக்கலாம் என்றும் விவாதங்கள் எழுந்துள்ளனர். மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப் பிரேக்கரான ஷர்துல் தாக்கூர், இன்றைய ஆட்டத்தில் 2 ஓவர்களை மட்டுமே வீசியுள்ளதால், என்னடா இது லார்ட் தாக்கூருக்கு வந்த சோதனை என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.