துபாய்: இந்தியாவுக்கு எதிரான 2025 ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் போட்டியில், பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஃபக்கர் ஜமான்-க்கு அளிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 'அவுட்' குறித்து, அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் சோயிப் அக்தர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். "26 கேமரா இருந்தும் அதை சரியாக பார்க்கவில்லை. அது அவுட்டே இல்லை, சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்குத் தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும்" என்று அவர் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பாகிஸ்தான் இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பிடித்த 'கேட்ச்'சால் ஃபக்கர் ஜமான் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பந்து தரையில் பட்டதா இல்லையா என்ற சந்தேகம் எழுந்ததால், இந்த முடிவு மூன்றாவது நடுவருக்கு அனுப்பப்பட்டது.

நீண்ட நேரம் சோதித்த மூன்றாவது நடுவர், இறுதியில் ஃபக்கருக்கு 'அவுட்' கொடுத்தார். இந்தத் தீர்ப்பு பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பு குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய சோயிப் அக்தர், மூன்றாவது நடுவரின் செயல்பாட்டைக் கடுமையாகச் சாடினார்.
"ஃபக்கர் 'அவுட்' இல்லை. சந்தேகத்தின் பலன் அவருக்கே சென்றிருக்க வேண்டும். நடுவரால் சரியான கோணத்தைப் பார்க்க முடியவில்லை என்கிறார், ஏன் பார்க்க முடியவில்லை? அங்கே 26 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, ஆனாலும் சரியான கோணம் கிடைக்கவில்லையா? அவர் இரண்டு கோணங்களை மட்டும் பார்த்துவிட்டு தனது முடிவை அறிவித்துவிட்டார். அதில் ஒரு கோணத்தில், பந்து தரையில் படுவது போலத் தெளிவாகத் தெரிந்தது."
"ஒருவேளை ஃபக்கர் தொடர்ந்து ஆடியிருந்தால், போட்டியின் முடிவே மாறியிருக்கலாம். மொத்தத்தில், நடுவரின் தரம், குறிப்பாக மூன்றாவது நடுவரின் தரம், எனக்கு திருப்திகரமாக இல்லை. பந்து தரையில் பட்டது தெளிவாகத் தெரிகிறது" என்று அக்தர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
நடுவரின் தீர்ப்பால் ஃபக்கர் ஜமானும் களத்தில் கடும் அதிர்ச்சி அடைந்தார். தன்னால் நம்பவே முடியாத நிலையில், கோபத்துடன் பெவிலியன் திரும்பும்போது பயிற்சியாளரிடம் சைகை செய்ததும் காணொளிகளில் பதிவாகியிருந்தது. இந்த ஒரு விக்கெட், போட்டியின் ஆரம்பத்திலேயே பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பல சர்ச்சைகள் வெடித்த இந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், ஃபக்கர் ஜமானின் விக்கெட்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஐசிசி-யிடம் அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.