துபாய்: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் செய்யப்பட்ட தவறுகளே, தோல்விக்கு காரணம் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் சோயிப் அக்தர் விமர்சித்துள்ளார். அதேபோல் ஸ்பின்னர்களுக்கு எதிராக திலக் வர்மா திணறிய போது, ஹாரிஸ் ராஃப்-ஐ கொண்டு வந்து பவுலிங் செய்ய வைத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இந்த ஆசியக் கோப்பை தொடரில் 3 போட்டிகளில் இந்திய அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடிய போதும், ஒன்றில் கூட வெல்ல முடியவில்லை. இறுதிப் போட்டியில் கூட பாகிஸ்தான் அணி 113 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டுமே இருந்து வலுவான நிலையில் இருந்தது.

ஆனால் அடுத்த 33 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டாகியது. இதனால் பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையுடன் ஆடி இருந்தாலும், இந்திய அணியை வீழ்த்தி இருக்க முடியும். ஆனால் பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி ஷாட்களை ஆடி விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை வீழ்த்த பாகிஸ்தான் பவுலர்களிடமும் எந்தத் திட்டமும் இல்லை. இதுதொடர்பாக பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் சோயிப் அக்தர் பேசுகையில், பாகிஸ்தான் அணித் தேர்வில் எடுக்கப்பட்ட மோசமான முடிவுகளை நிச்சயம் விமர்சிக்க வேண்டும். ஏனென்றால் பயிற்சியாளர்களின் முடிவில் கொஞ்சம் கூட அடிப்படிஅ நியாயம் இல்லை.
ஹசன் நவாஸ், சல்மான் மிர்சா போன்றவர்கள் விளையாடவில்லை. அவர்கள் விளையாடாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் குறித்து ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்றாக தெரியும். அதேபோல் முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப் மற்றும் ஷாகீன் அப்ரிடி ஆகியோரிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கிறீர்கள். லோயர் ஆர்டர் வீரர்கள் 50 ரன்கள் பங்களித்து தான் 175 ரன்களை சேர்க்க வேண்டுமா?
பாகிஸ்தான் அணித் தேர்விலேயே அதிக தவறுகள் உள்ளது. அதேபோல் சல்மான் ஆகாவின் கேப்டன்சியில் சில கேள்விகள் உள்ளது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறிக் கொண்டிருந்த போது, ஹாரிஸ் ராஃப்க்கு பவுலிங் கொடுத்துள்ளார். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது. அங்கிருந்தே பாகிஸ்தான் தோல்வி தொடங்கியது என்று தெரிவித்தார்.