கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததை ஜீரணிக்க முடியாத அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாகச் சாடியுள்ளார். நேரலைத் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி மற்றும் அணியின் மூத்த வீரர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவு போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 175 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

இந்தியாவிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு பேசிய அக்தர், "பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி, ஷதாப் கான் போன்ற மூத்த வீரர்கள் முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து சொதப்புகிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு ஏன் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படுகிறது? இவர்களை நீங்கள் பெரிய நட்சத்திரங்களாகக் கொண்டாடுகிறீர்கள். ஆனால் இவர்களால் ஒரு போட்டியை கூட வென்று தர முடியவில்லை. வெறும் நட்சத்திர அந்தஸ்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன பயன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியை நேரடியாகத் தாக்கிப் பேசிய அக்தர், அவருக்கு கிரிக்கெட் வாரியத்தை எப்படி நடத்துவது என்றே தெரியவில்லை என்று குற்றம் சாட்டினார். "உலகிலேயே மிகப்பெரிய குற்றம் என்ன தெரியுமா? தகுதி இல்லாத ஒருவரிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைப்பதுதான். திறமை இல்லாத ஒருவரிடம் பதவியைக் கொடுத்தால், அவர் அந்த அமைப்பையே அழித்துவிடுவார்." என்றார் அக்தர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருக்குத் தான் வகிக்கும் பதவியின் முக்கியத்துவமே தெரியவில்லை என்று கூறிய அக்தர், தகுதியற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்று வேதனை தெரிவித்தார். இந்தியாவிடம் தொடர்ந்து அடிவாங்கும் பாகிஸ்தான் அணியின் நிலைமை குறித்தும், அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய நிர்வாகம் குறித்தும் அக்தர் முன்வைத்த இந்தக் கடுமையான விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.