துபாய்: இந்தியாவுக்கு எதிரான 2025 ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி சந்தித்த படுதோல்வி, அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவானும், 'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்படுபவருமான சோயிப் அக்தர், தனது சொந்த அணியின் ஆட்டத்தை "கிளப் லெவல் கிரிக்கெட்" என்று வர்ணித்து, மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில், இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்துத் துறைகளிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானை, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, 20 ஓவர்களில் 127 ரன்களுக்குச் சுருட்டினர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளரான ஷஹீன் அஃப்ரிடி அடித்த 16 பந்துகளில் 33 ரன்கள் இல்லையென்றால், பாகிஸ்தானின் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். 128 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி, கேப்டன் சூர்யகுமார் யாதவின் 37 பந்துகளில் 47 ரன்கள் உதவியுடன், 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தனது காட்டமான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்ற சோயிப் அக்தர், பாகிஸ்தானின் இந்தத் தோல்விக்குப் பிறகு தனது யூடியூப் சேனலில் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். "இது எல்லா வகையிலும் ஏமாற்றமளிக்கும் செயல்பாடு. பாகிஸ்தான் விளையாடும் கிரிக்கெட்டின் தரத்திற்கும், உலகின் மற்ற அணிகள் விளையாடும் தரத்திற்கும் இடையே பெரும் வித்தியாசம் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மற்ற அணிகள் உயர் தரத்தில் விளையாடும்போது, நாங்கள் கிளப் லெவல் கிரிக்கெட்டை ஆடிக்கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மீது தனது கடுமையான விமர்சனத்தை அக்தர் வைத்தார். "நமது பேட்டிங்கின் தரம் என்ன என்பது முழுமையாக வெளிப்பட்டுவிட்டது... அல்லது தரம் இல்லை என்பதே வெளிப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ், நமது பந்துவீச்சாளர்களை வைத்து ஸ்வீப், கட் என மனம்போன போக்கில் விளையாடிக்கொண்டிருந்தார்" என்று அவர் சீறினார்.
பந்துவீச்சாளரான ஷஹீன் அஃப்ரிடி, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விட சிறப்பாக ஆடியதைச் சுட்டிக்காட்டி, அக்தர் மேலும் கேள்வி எழுப்பினார். "இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது என்று நீங்கள் சொன்னால், ஒரு பந்துவீச்சாளரான ஷஹீன் அஃப்ரிடி மட்டும் எப்படி 16 பந்துகளில் 33 ரன்கள், அதுவும் சில சிக்ஸர்களுடன், அடிக்க முடிந்தது?" என்று கேட்டார் அக்தர்.
பாகிஸ்தான் அணி உலகின் பெரிய அணிகளுடன் போட்டியிடும் தகுதியற்றது என்று அக்தர் கூறினார். "நம்மிடம் தரம் இல்லை. தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா போன்ற அணிகளுடன் போட்டியிடும் அணி நாங்கள் அல்ல. அசோசியேட் நாடுகளை விட நாம் கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான்" என்று கடுமையாக கூறினார்.