கராச்சி : பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் வெளியிட்ட ட்வீட் ஒன்று ரசிகர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதைக் கண்டு தான் வெளியிட்ட அந்த ட்வீட்டை சில மணி நேரத்தில் அழித்து விட்டார் அக்தர்.
பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளராக தன் அதிவேக பந்துகளால் மற்ற அணிகளை மிரட்டிய சோயப் அக்தர் தற்போது கிரிக்கெட் விமர்சகராக மாறி இருக்கிறார். அவர் சமூக ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகின்றன.

அந்த வகையில், தற்போது இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன 2023 உலகக்கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், அது குறித்து ஒரு ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.
அதில், "வரலாறு திரும்ப நடக்கும்" எனக் கூறி தான் பந்து வீசி விக்கெட் வீழ்த்தியதை போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதைக் கண்ட போது, அக்தர் என்ன சொல்ல வருகிறார்? உலகக்கோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்றதே இல்லை. அந்த வரலாற்றின்படி , இந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெறப் போவதில்லை என சொல்ல வருகிறாரா? என்ற கேள்வி எழுந்தது.
இதை அடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் பொங்கி எழுந்தனர். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நீங்கள் எப்படி பாகிஸ்தான் அணிக்கு எதிரான கருத்தை சொல்லலாம் எனக் கூறி அவரை வறுத்து எடுத்தனர். இதை அடுத்து பயந்து போன சோயப் அக்தர் அந்த பதிவை அழித்து விட்டார்.
அடுத்து பாகிஸ்தான் ரசிகர்களை குஷிப்படுத்தும் என நினைத்து வேறொரு பதிவை வெளியிட்டார். அதில் சச்சின் விக்கெட்டை சோயப் அக்தர் எடுத்து விட்டு மகிழ்ச்சியில் இருப்பது போன்ற படத்தை வெளியிட்டு இருந்தார்.அதில், "நாளை இப்படி ஒரு விஷயத்தை செய்தால் நன்றாக இருக்கும்" எனக் கூறி இருந்தார்.

இந்த முறை இந்திய ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்தனர். ஒருவர் அதே சச்சின், சோயப் அக்தர் பந்துகளை பவுண்டரி அடிப்பது போலவும், அதனால் அக்தர் சோகமாக இருப்பது போலவும் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பதிலடி கொடுத்தனர்.
தேவையே இல்லாமல் இரண்டு நாட்டு ரசிகர்களிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறார் சோயப் அக்தர்.