துபாய்: ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும் அந்நாட்டு அமைச்சருமான மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்காமல் மறுத்த இந்திய அணிக்கு சோயிப் மாலிக் சாபம் விட்டிருக்கிறார்.
இரு நாட்டுக்கும் இடையிலான போர் பதற்றத்தின் போது பாகிஸ்தான் அமைச்சரும் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மோசின் நக்வி இந்தியாவுக்கு எதிராக சில சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதனால் அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மோசின் நக்வியிடம் கோப்பையை வாங்க மாட்டோம் என இந்திய கிரிக்கெட் வாரியம் போர் கொடி தூக்கியது. ஆனால் கோப்பையை நான் தான் தருவேன் இல்லையென்றால் வாங்கிக் கொள்ளாமல் சென்று விடுங்கள் என மோசின் நக்வி கூறியதும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்தியாவின் இந்த செயலுக்கு சோயிப் மாலிக் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், ஆசியக் கோப்பையை வெல்ல ஒவ்வொரு வீரர்களும் எந்த அளவுக்கு கடும் நெருக்கடியை சந்தித்து இருப்பார்கள் என்று பாருங்கள். அவ்வளவு பெரிய நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள்.
இந்த கோப்பையை வெல்ல கடினமாக உழைத்து இருக்கிறார்கள். இவ்வளவு கடின உழைப்பும் எதற்காக கோப்பையை வெல்ல தானே? தொடரைக் கைப்பற்ற தானே? அப்படி இருக்கும்போது இந்த உழைப்பை கொட்டிய பிறகு கோப்பையை வாங்க வரமாட்டேன் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. உண்மையிலேயே ஆசியக் கோப்பையை இந்தியா வென்றது மிகப்பெரிய சாதனைதான்.
அதுவும் இப்படி கடும் நெருக்கடி உள்ளான போட்டிக்கு பின் இந்த வெற்றி கிடைத்து இருக்கிறது. அப்படி இருக்கும் போது இந்திய அணி வீரர்கள் ஏன் கோப்பை வாங்க வரவில்லை. இப்போது வேண்டுமானால் கோப்பை இல்லாமலேயே நீங்கள் கோப்பையை வாங்கியது போல் நடித்து நாடகம் ஆடி கொண்டாடலாம். ஆனால் இந்த செயல் பிற்காலத்தில் இந்தியாவை வந்து பாதிக்கும். நீங்கள் செய்தது தவறு. ஒரு விளையாட்டு வீரராக உங்களுடைய பணி மைதானத்திற்கு வந்து விளையாடி உங்களுடைய பங்களிப்பை அணிக்காக தருவது மட்டும்தான் என்று சோயிப் மாலிக் சாடியுள்ளார்.இது குறித்து பேசிய கேப்டன் சூரியகுமார், என் அருகில் உள்ள 14 வீரர்களுமே எனக்கு ஒரு கோப்பை போல் தான். அவர்கள் என் மனதில் என்றும் நிற்பார்கள் என்று கூறி இருந்தார்.