கொழும்பு : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 10 அன்று நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக பேட்டி அளித்த இந்திய அணியின் துவக்க வீரர் சும்பன் கில், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருவது குறித்து வெளிப்படையாக கருத்து கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

முதல் சந்திப்பு : ஆசிய கோப்பை தொடரில் குரூப் சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்தித்தது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் கூட்டணியான ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரௌப் ஆகியோரின் பந்துவீச்சில் தடுமாறியது இந்திய அணியின் டாப் ஆர்டர்.
விமர்சனம் : சுப்மன் கில் 11, ரோஹித் சர்மா 10, விராட் கோலி 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து இருந்தனர். அவர்களது ஆட்டம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில், மீண்டும் பாகிஸ்தான் அணியை சூப்பர் 4 சுற்றில் சந்திக்க உள்ளது இந்திய அணி.
சுப்மன் கில் பதில் : இந்தப் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுப்மன் கில், "நாங்கள் மற்ற அணிகளுடன் விளையாடிய அளவுக்கு பாகிஸ்தான் அணியுடன் ஆடவில்லை. அவர்களிடம் தரமான பந்துவீச்சு இருக்கிறது. அதுபோன்ற தரமான பந்துவீச்சை அடிக்கடி சந்தித்து இருக்கவில்லை என்றால் அது உங்கள் ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தும்" என்றார்.
சமாளிக்குமா இந்தியா? : கிட்டத்தட்ட இதுவரை பாகிஸ்தான் அணி போன்ற ஒரு அதிரடி பந்துவீச்சை சந்தித்ததே இல்லை என்பதை ஒப்புக் கொண்டு இருக்கிறார் சுப்மன் கில். அப்படியென்றால் அடுத்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சமாளிக்குமா? அல்லது சறுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.