கொழும்பு : பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடியின் பிம்பத்தை அடித்து சுக்கு நூறாக்கி இருக்கிறார் இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில்.
இந்தப் போட்டிக்கு முன் இந்திய அணியை விமர்சனம் செய்தும், பாகிஸ்தான் பந்துவீச்சை, குறிப்பாக ஷஹீன் ஷா அப்ரிடி குறித்து புகழ்ந்து தள்ளிய அனைவருக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

ஷஹீன் ஷா அப்ரிடியின் பிம்பம் : பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி சமீப காலங்களில் அச்சுறுத்தும் பந்து வீச்சாளராக வலம் வருகிறார். அவருடன் ஹாரிஸ் ரௌப், நசீம் ஷா ஆகியோர் இணைந்து எதிரணிகளின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்துவதோடு விக்கெட்களை வேட்டையாடி வருகின்றனர்.
விமர்சனம் : முந்தைய ஆசிய கோப்பை குரூப் போட்டி சந்திப்பின் போது, இந்திய அணியின் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் அப்ரிடி பந்துவீச்சில் தடுமாறினர். ரோஹித் சர்மா, கோலி விக்கெட்டை அவர் வீழ்த்தி இருந்தார். அதனால் அப்போது இந்திய அணியின் பேட்டிங் குறித்து விமர்சனம் எழுந்தது.
அடித்து ஆடிய கில் : அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் துவக்க ஜோடி அதிரடி ஆட்டம் ஆடியது. அதிலும் சுப்மன் கில் ஷஹீன் ஷா அப்ரிடி வீசிய முதல் மூன்று ஓவர்களில் இரண்டு ஓவர்களை முழுமையாக சந்தித்தார்.
யாரும் செய்யாத சாதனை : அந்த 12 பந்துகளில் ஆறு ஃபோர் அடித்து அப்ரிடி பந்துவீச்சை துவம்சம் செய்தார். இதுவரை எந்த பேட்ஸ்மேனும் ஷஹீன் ஷா அப்ரிடி பந்துவீச்சில் ஒருநாள் போட்டியில் ஆறு பவுண்டரிகளை அடித்ததில்லை. அதை செய்த முதல் வீரர் சுப்மன் கில் தான்.
உடைந்து போன பிம்பம் : இந்த சாதனை மூலம் இதுவரை பயமுறுத்தி வந்த ஷஹீன் ஷா அப்ரிடியின் பிம்பம் சுக்கு நூறாக உடைந்து போயுள்ளது. அதே சமயம், கில், ரோஹித் இருவரும் தங்கள் மீது இருந்த விமர்சனத்தையும் காலி செய்துள்ளனர்.
போட்டி தள்ளி வைப்பு : சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியில் மழை பெய்ததால் போட்டி அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர் 4 சுற்றில் இந்தப் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் இருப்பது குறிப்பிடத்தக்கது.