துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சும்மங்கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் ஆக்ரோஷமாக விளையாடியது ரசிகர்களை மகிழ்ச்சியில் எல்லைக்கு கொண்டு சென்றது.
குறிப்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் பேட்டிங் மட்டுமல்லாமல் வாயிலும் சேர்த்து பதிலடி கொடுத்தனர். 1996 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத்துக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் அமீர் சோஹைல் பந்தை பவுண்டரிக்கு அடித்து விட்டு பௌண்டரிக்கு சென்ற பந்தை காட்டி வாய் சவடாலில் ஈடுபடுவார்.

ஆனால் அடுத்த பந்திலே வெங்கடேஷ் பிரசாத் அவரை போல்டாக்கி பதிலடி கொடுப்பார். இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்து 29 ஆண்டுகள் கழித்து அதே போல் ஒரு சம்பவம் தற்போது ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்ற ஆட்டத்தில் நடைபெற்றது. 172 என்ற இலக்கை எதிர்கொண்டு இந்திய வீரர்கள் களமிறங்கினர்.
ஆடுகளம் தோய்வாக மாற வாய்ப்பு இருப்பதால் பவர் பிளேவிற்குள்ளே இந்திய அணி வீரர்கள் ரன்களை குவிக்க தொடங்கினர். அபிஷேக்சர்மா, சிக்சர் பௌண்டரி என அடிக்க சுப்மன் கில்லும் இந்த கச்சேரியில் இணைந்து கொண்டார். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் கடைசி பந்தை ஷாகின் அப்ரிடி வீச அதனை கில் பவுண்டரிக்கு அடித்துவிட்டு அவரை கூப்பிட்டு ஏதோ ஹிந்தியில் திட்டினார்.
பந்து பௌண்டருக்கு போகிறதை பார்க்கிறாயா? என்று கில் ஹிந்தியில் கேட்டிருக்கிறார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கிளப்பி இருக்கின்றது. பொதுவாக பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் பெரியதாக வாய் சண்டையில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் இன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு பேட்டிங்கில் மட்டும் அல்லாமல் வாய் மூலமும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்யும்போது அவர்கள் ஏதேனும் சொல்லி இருக்கலாம் என்றும் அதனால் கோபப்பட்டு தான் இந்திய வீரர்கள் தற்போது பதிலடி கொடுத்து வருகின்றனர் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். பாகிஸ்தான் சரியாக விளையாடாத நிலையில், இது போன்ற மோதல் மீண்டும் இந்த போட்டி மீதான விறுவிறுப்பை அதிகப்படுத்தும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.