கராச்சி : 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல மறுத்து வருகிறது. தற்போது சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கும் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்து உள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த விஷயம் அறிவிக்கப்படாத நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்வீர் இந்திய அணியை சீண்டும் வகையில் பேசி இருக்கிறார்.
பாகிஸ்தான் வீரர்கள் சிங்கங்கள் என்றும், அவர்கள் இந்தியாவின் குகைக்கே வந்து விளையாடிவிட்டு சென்றதாகவும், அதற்கு பெயர் தான் வீரம், உங்களுக்கும் தைரியம் இருந்தால் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடுங்கள் எனவும் கூறி இருக்கிறார். அவரது பேச்சு பிசிசிஐ மற்றும் இந்திய அணியை சீண்டுவதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலுக்கு பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில்லை. அதே சமயம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் ஆசிய கோப்பை போன்ற பொதுவான கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன.
கடந்த 17 ஆண்டுகளில், மூன்று முறை இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. ஆனால், பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி மறுத்து. இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் இலங்கையில் நடத்தச் செய்தது பிசிசிஐ.
அதேபோல, இப்போது 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும், இந்திய அணி ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்வீர் இதுபற்றி பேசுகையில், "நாங்கள் சிங்கங்கள். உங்களுடைய குகைக்கே வந்து உங்களுடன் விளையாடினோம். உங்களுக்கு தைரியம் இருந்தால் நீங்களும் பாகிஸ்தான் வந்து எங்களுடன் விளையாடுங்கள். நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம். என்ன வேண்டுமோ அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம். ஒருமுறை இங்கு வாருங்கள். பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே இந்தியாவுக்கு சென்று விளையாடி இருக்கிறோம். அதைத்தான் நாம் வீரம் என்று குறிப்பிடுவோம்" இவ்வாறு சோஹைல் தன்வீர் பேசி இருக்கிறார்.