துபாய்: இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டி, கைகுலுக்கல் சர்ச்சை, முன்னாள் வீரர்களின் விமர்சனம் எனப் பல முனைகளிலும் பாகிஸ்தான் அணிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பாகிஸ்தான் அணியின் தரம் குறித்து மிகக் கடுமையாக விமர்சித்து, அந்த அணியின் கௌரவத்தையே சுக்குநூறாக்கியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானை 127 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணி, பின்னர் 25 பந்துகள் மீதமிருக்க, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஒருதலைப்பட்சமான ஆட்டம், பலரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்திய நிலையில், சவுரவ் கங்குலி இதுகுறித்து தனது கூர்மையான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
திங்கட்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சவுரவ் கங்குலி, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டினார். "பாகிஸ்தான் ஒரு போட்டியே அல்ல. நான் இதை மரியாதையுடன்தான் சொல்கிறேன், காரணம் நான் அவர்களின் பழைய அணியைப் பார்த்திருக்கிறேன். தற்போதைய அணியில் தரம் இல்லை" என்று கங்குலி தனது பேட்டியைத் தொடங்கினார்.
"கிரிக்கெட்டில், பாகிஸ்தானையும், இந்த ஆசிய கோப்பையில் உள்ள மற்ற அணிகளையும் விட இந்தியா பல மடங்கு முன்னேறிவிட்டது. ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் அவர்கள் தோற்கலாம், ஆனால் பெரும்பாலான நாட்களில் இந்தியாதான் சிறந்த அணியாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
பாகிஸ்தானின் ஆட்டம் குறித்துப் பேசிய கங்குலி, அவர்களைக் கிண்டலடிக்கும் விதமாக ஒரு கருத்தைப் பதிவு செய்தார். "உண்மையைச் சொல்லப்போனால், அவர்கள் ஆடியதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை. நான் முதல் 15 ஓவர்களுக்குப் பிறகு கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டு, மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலீஷ் பிரீமியர் லீக்) கால்பந்து போட்டியைப் பார்க்கப் போய்விட்டேன்" என்று அவர் கூறியது, பாகிஸ்தான் அணியின் ஆட்டம் எவ்வளவு சலிப்பூட்டுவதாக இருந்தது என்பதை வெளிப்படுத்தியது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு கொடுக்கப்படும் 'ஹைப்' குறித்தும் கங்குலி பேசினார். "இந்தியா - பாகிஸ்தான் இடையே இப்போது எந்தப் போட்டியும் இல்லை. நாம் எப்போதுமே பாகிஸ்தானை வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், சயீத் அன்வர், ஜாவேத் மியாந்தத் போன்ற வீரர்களைக் கொண்ட அணியாக நினைக்கிறோம். ஆனால், தற்போதைய பாகிஸ்தான் அணி அப்படி இல்லை. அந்த அணிக்கும் இந்த அணிக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது."
"இப்போது எந்தப் போட்டியும் முன்பு போல இல்லை. பாகிஸ்தான் ஆட்டத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, இந்தியா ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை அல்லது ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதைப் பார்க்கவே நான் விரும்புவேன். இந்தியா - பாகிஸ்தான் போட்டி இனி ஒரு போட்டியாகவே இல்லை என்று நான் நினைக்கிறேன். நாம் தொடர்ந்து இதற்கு 'ஹைப்' கொடுத்துக் கொண்டிருக்கிறோம், கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு 'ஹைப்பும்' உடைக்கப்பட்டு வருகிறது. இது ஒருவழிப் பாதையாகவே உள்ளது" என்று கங்குலி கூறி தனது பேட்டியை முடித்தார்.
சோயிப் அக்தர், ஷாஹித் அஃப்ரிடி போன்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர்களே தங்கள் அணியைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட்டின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான சவுரவ் கங்குலியின் இந்தக் கருத்து, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய நிலையை உலகிற்குக் காட்டியுள்ளது.