லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மிகப்பெரிய வித்தியாசத்தை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அணியின் டிஎன்ஏ-வில் வெற்றி உள்ளது என்றும், பாகிஸ்தான் அணியின் டிஎன்ஏ-வில் தோல்விதான் இருக்கிறது என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷித் லத்தீப், "டாஸ் தோற்றாலும் இந்திய அணி 250 ரன்களைக் குவிக்கிறது. அவர்களை வேறு எந்த அணியாலும் நெருங்கக் கூட முடியாது. இது ஒரே இரவில் நடந்த மாயாஜாலம் அல்ல, கடந்த 10 ஆண்டுகால கடின உழைப்பின் பலனாகும். கோப்பைகளை வெல்வது என்பது இந்தியாவின் டிஎன்ஏ-வாக மாறிவிட்டது. ஆனால், நாக் அவுட் சுற்றுக்கு முன்பாகவே வெளியேறுவதுதான் நமது அணியின் டிஎன்ஏ-வாக உள்ளது. இறுதிப்போட்டிக்குச் சென்று கோப்பையை வெல்வதையே இந்திய அணி வாடிக்கையாகக் கொண்டுள்ளது" என்று கூறினார்.

இந்த டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து மோசமாக விளையாடிய வீரர்களுக்குத் தலா 50 லட்சம் அபராதம் விதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பேசிய லத்தீப், பலவீனமான கிரிக்கெட் வாரியங்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் என விமர்சித்தார். மேலும், இந்திய அணியில் உள்ள தொடர்ச்சியான நிலைத்தன்மை அவர்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்றும், பாகிஸ்தானில் அடிக்கடி செய்யப்படும் தேவையற்ற மாற்றங்கள் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் ஜாவேத் மியாண்டட் பேசுகையில், இந்திய அணியின் மிகச்சிறந்த கட்டமைப்பைப் பாராட்டினார். இந்திய அணியிடம் பேட்ஸ்மேன்கள், ஸ்பின்னர்கள் அல்லது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்தப் பஞ்சமும் இல்லை என்று பெருமிதத்துடன் கூறினார். அதேபோல், முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் முகமது வாசிம் கூறுகையில், இந்திய அணியிடம் தோற்கும்போதெல்லாம் சதித்திட்டங்களைத் தேடுவதை விட்டுவிட்டு, இந்திய அணியின் ஆதிக்கத்தை பாகிஸ்தான் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி இருக்கிறார்.
