துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி படு தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 15 புள்ளி 5 ஓவரில் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 11-வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்திருக்கிறது. ஆனால் பாகிஸ்தான அணி பெறும் மூன்று போட்டிகளில் தான் வென்றுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் இது பாகிஸ்தான் அணியே கிடையாது என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் நான் சொல்வதை அஜய் ஜடேஜா, இர்ஃபான் பதான், சேவாக் ஆகியோர் ஒப்புக்கொள்வார்களா மாட்டார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் 1960 ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் அணியை பார்த்து வருகின்றேன்.
பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஹனீப் முகமது விளையாடுவதை பார்ப்பதற்காக நான் மும்பையில் சர்ச் கேட் ஸ்டேஷனில் இருந்து பிராபவுன் மைதானத்திற்கு ஓடியே சென்று இருக்கிறேன். பல ஆண்டுகளில் முதல் முறையாக நான் இன்றைய ஆட்டத்தை பார்த்த போது இது உண்மையிலேயே பாகிஸ்தான் அணியே கிடையாது. இது ஒரு கேவலமான அணி என்று தான் எனக்கு தோன்றியது.
நான் பார்த்த அணிக்கும் இப்போதுள்ள அணிக்கும் சம்பந்தமே இல்லை. இந்தியா மட்டுமல்ல இந்த தொடரில் பாகிஸ்தான் அணி வேறு எந்த அணிக்கும் நெருக்கடி கொடுக்க முடியாது என்று நினைக்கின்றேன். இதேபோன்று வீரர்கள் கைகுலுக்காத விவகாரத்தில் பேசிய கவாஸ்கர், விளையாட்டும் அரசியலும் எப்போதும் பிரிந்ததே கிடையாது.
இந்திய அணி கைகுலுக்காமல் சென்றதை நான் விமர்சிக்க முடியாது. அந்த விவாதத்தில் நான் பங்கேற்க விரும்பவில்லை. நாம் அரசியல் பற்றி பேச ஆரம்பித்து விட்டால் பல விஷயங்கள் பற்றி பேச வேண்டும். ஆனால் அது எனக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. எதிர் அணியிடம் கைகுலுக்கலாமா? இல்லை வேண்டாம் என முடிவு எடுப்பதும் தனிப்பட்ட நபர்களில் விருப்பம்.அதில் நாம் என்ன சொல்ல முடியும். அது அவர்களுடைய உரிமை என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.