துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 12 போட்டிகளில் வெற்றியும் வெறும் மூன்று போட்டிகளில் தோல்வியுமே தழுவி இருக்கின்றது.
ஒரு காலத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதினால் கடும் சவால்களும் போட்டியும் நிறைந்திருக்கும். ஆனால் தற்போது நடைபெறும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக ஒரு தலைப்பட்சமாகவே முடிவு அடைகிறது.

கடைசியாக இந்தியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வென்றது மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகும். இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே சவால்கள் நிறைந்த போட்டி இருக்கிறது என்று சொல்லாதீர்கள் என கேப்டன் சூரியகுமார் யாதவ் ஒரே போடாக போட்டு இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், "இனி எங்களிடம் பாகிஸ்தானுக்கு எதிரான உள்ள போட்டியில் இருக்கும் சவால்கள் குறித்து கேள்வி கேட்க வேண்டாம். நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். என்னை கேட்டால் ஒரு நல்ல அணி என்பது சவால்களை கொடுக்க வேண்டும். என்னைக் கேட்டால் எடுத்துக்காட்டாக இரண்டு அணிகள் 15 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள் என வைத்து கொள்வோம்."
"அதில் இரண்டு அணிகளும் தலா ஏழு முறை வெற்றியும், ஏழு முறை தோல்வியும் பெற்றிருக்கிறார்கள். இல்லை ஒரு அணி எட்டு போட்டிகளிலும், இன்னொரு அணி 7 போட்டிகளில் வென்று இருந்தால் அதனை சவால்கள் நிறைந்த போட்டி என்று கூறலாம். ஆனால் நாங்கள் 13க்கு0, பத்துக்கு ஒன்று என்று பாகிஸ்தானுக்கு எதிராக வென்று வருகிறோம். சரியான புள்ளி விவரம் எனக்கு தெரியவில்லை."
"ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் இனி எங்களுக்கு சவால் நிறைந்த போட்டியை கிடையாது. ஏனென்றால் நாங்கள் பாகிஸ்தானை விட சிறப்பான கிரிக்கெட்டை ஆடி வருகின்றோம். 10 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 91- ரன்கள் எடுத்த நிலையில் முதல் இடைவேளை வந்தது. அதுதான் ஆட்டத்தில் திருப்புமுனை என்று நான் நினைக்கின்றேன். அந்த இடைவெளிக்கு பின்பு எங்கள் அணியின் வீரர்களின் உடல் மொழி அனைத்தும் மாறிவிட்டது."
"பவர்பிளே முடிவடைந்த உடன் எப்போதுமே போட்டி போக்கில் திருப்புமுனை ஏற்படும். நாங்கள் பத்து ஓவருக்கு பிறகு பந்துவீச்சு நன்றாக கவனம் செலுத்தினோம். இந்த ஆடுகளத்தில் எவ்வாறு பந்து வீசவேண்டும் என்பதை தெரிந்து கொண்டோம். எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிவம் துபேவின் அந்த பந்துவீச்சு தான் போட்டியிலே திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்."
"சிவம் துபே எங்களுக்கு எதிராக பயிற்சியில் பந்து வீசுவார். தற்போது அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் குறைந்த பட்சம் இரண்டு ஓவர்கள் வீச வேண்டும் என சிவம் துபே நினைப்பார். தற்போது நான்கு ஓவர்கள் முழுமையாக வீசப்பட்டது என்று அவர் மகிழ்ச்சி கொள்கின்றார். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர் அணிக்காக வெற்றியை தேடி தருவார்" என்று சூரிய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.