அபுதாபி: 2025 ஆசிய கோப்பை தொடரில், ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் நடந்துகொண்ட விதம், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஏற்கனவே கனன்று கொண்டிருக்கும் நெருப்பில் மேலும் எண்ணெயை ஊற்றியுள்ளது. போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில், பாகிஸ்தான் குறித்த கேள்விக்கு சூர்யகுமார் யாதவ் நேரடியாக பதிலளிக்காமல் தவிர்த்தது, சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் வீரர்களுக்குக் கை கொடுக்க மறுத்த சர்ச்சையை மீண்டும் கிளறியுள்ளது.
நாளை சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதவிருக்கும் நிலையில், போட்டிக்கு முன்பான பரபரப்பை மேலும் உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. அப்படி என்ன சொன்னார் சூர்யகுமார்?

அபுதாபியில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி ஓமனை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தோல்வியே சந்திக்காமல் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறியது. ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய அணிகளை வீழ்த்தி, 'குரூப் ஏ' பிரிவில் முதலிடம் பிடித்தது. ஞாயிற்றுக்கிழமை, துபாயில் நடைபெறும் சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தானை இந்தியா மீண்டும் சந்திக்கவுள்ளது. இந்த மாபெரும் மோதலுக்கு இந்திய அணி தயாராக உள்ளதா என்று போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் சூர்யகுமார் யாதவிடம் கேட்கப்பட்டது.
ஆனால், அந்த கேள்விக்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ், 'பாகிஸ்தான்' என்ற பெயரை உச்சரிப்பதைத் தவிர்த்து, சூப்பர் ஃபோர் சுற்றில் உள்ள அனைத்து அணிகளையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பொதுவாகக் குறிப்பிட்டார். "சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முழுமையாகத் தயார்" என்று மட்டும் அவர் பதிலளித்தது, பாகிஸ்தானை அவர் வேண்டுமென்றே புறக்கணித்ததாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
மேலும், இந்தப் போட்டியில் தன்னை 11வது வீரராகக் களமிறக்கியது குறித்து நகைச்சுவையாகப் பேசிய அவர், "அடுத்த போட்டியிலிருந்து கண்டிப்பாக நான் முன்வரிசையில் பேட்டிங் செய்ய முயற்சிப்பேன்" என்று கூறினார். ஓமன் அணியின் அபாரமான ஆட்டத்தையும், குறிப்பாக அவர்களின் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி-யின் பங்களிப்பையும் வெகுவாகப் பாராட்டினார்.
ஒருபுறம் பாகிஸ்தான் பெயரை உச்சரிக்கத் தயக்கம் காட்டிய சூர்யகுமார், மறுபுறம் ஓமன் அணி வீரர்களிடம் மிகவும் இணக்கமாக நடந்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. போட்டி முடிந்ததும், ஓமன் வீரர்களை அரவணைத்து, அவர்களுடன் சகஜமாகப் பேசி, புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஹர்திக் பாண்டியா-வும் சில ஓமன் வீரர்களைக் கட்டித்தழுவினார்.
இந்த அணுகுமுறை, சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி காட்டிய அணுகுமுறைக்கு முற்றிலும் நேர்மாறாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் முடிவில், அந்த அணியின் வீரர் சல்மான் ஆகா-வுக்கு கை கொடுக்க சூர்யகுமார் யாதவ் மறுத்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வரும் செப்டம்பர் 21 அன்று (நாளை) இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோத உள்ள நிலையில் இது ஒரு கௌரவப் பிரச்சினையாகவும் மாற்றியுள்ளது. சூர்யகுமாரின் சமீபத்திய செயல், இந்த மோதலுக்கான தீயை மேலும் பற்றவைத்துள்ளது என்பதே நிதர்சனம்.