மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுடன் விளையாடப் போவதில்லை எனப் பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், அது குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார். "நாங்கள் கொழும்புக்குச் செல்லத் தயாராக உள்ளோம், விமான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன" என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற கேப்டன்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் விவகாரம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு மிகத் தெளிவாகவும், நிதானமாகவும் பதிலளித்தார்.

பாகிஸ்தானின் புறக்கணிப்பு குறித்துப் பேசிய சூர்யகுமார், "எங்களுடைய மனநிலை மிகவும் தெளிவாக உள்ளது. அவர்களுடன் (பாகிஸ்தானுடன்) விளையாட மாட்டோம் என்று நாங்கள் சொல்லவே இல்லை. அந்தப் பக்கம் (பாகிஸ்தான்) இருந்துதான் மறுப்பு வந்துள்ளது. ஐசிசி எங்களுக்கு ஒரு அட்டவணையைத் தந்துள்ளது. அரசாங்கமும் பொதுவான இடத்தில் விளையாட ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் நாங்கள் விளையாடத் தயாராகவே இருக்கிறோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் பயணத் திட்டம் குறித்தும் விளக்கினார். "நாங்கள் கொழும்பு செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. நாங்கள் அங்குச் செல்கிறோம். முதலில் அமெரிக்காவுடன் மோதுகிறோம், அடுத்து கனடா அணியைச் சந்திக்கிறோம். அதன் பிறகு அட்டவணைப்படி கொழும்புக்குக் கிளம்புகிறோம். அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று நறுக்குத் தெறித்தாற்போல பதிலளித்தார்.
பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தாலும், இந்திய அணி திட்டமிட்டபடி மைதானத்திற்குச் செல்லும் என்பதைச் சூர்யகுமாரின் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது. "நாங்கள் எங்கள் வேலையைச் சரியாகச் செய்கிறோம். அவர்கள் வருவதும் வராததும் அவர்கள் முடிவு," என்ற ரீதியில் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளது இந்திய ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணி வராவிட்டால், இந்திய அணிக்கு வெற்றி வழங்கப்பட்டுப் புள்ளிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எது நடந்தாலும் அதை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக உள்ளது என்பதையே கேப்டனின் இந்தத் பேச்சு காட்டுகிறது.