கொழும்பு: 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. வெற்றிக்குப் பிறகு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்த வெற்றியை நாட்டிற்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நடப்புச் சாம்பியனான இந்தியா, இப்போட்டியின் மூலம் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது வெற்றிப் பதிவை எட்டாக உயர்த்தியுள்ளது. போட்டிக்கு பின் பேசிய கேப்டன் சூர்யகுமார், "இந்த வெற்றி இந்தியாவுக்கானது. நாங்கள் ஆட விரும்பிய அதே வகையான கிரிக்கெட்டை ஆடினோம். இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்தது சிறந்த முடிவாக அமைந்தது," என்றார்.

இஷான் கிஷன் பற்றி பேசிய சூர்யகுமார் , "அவர் புதுமையான சிந்தனையுடன் செயல்பட்டார். 0/1 என்ற நிலையில், யாராவது பொறுப்பேற்க வேண்டியிருந்தது, அதை அவர் அற்புதமாகச் செய்தார்," என்றார். மேலும், "முதலில் பேட் செய்யும்போது, பனிப்பொழிவு அல்லது பிட்ச் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாது. ஆனால் நாங்கள் எடுத்த ஸ்கோர் சராசரியை விட 15 ரன்கள் அதிகம் என உணர்ந்தோம்," என்றும் குறிப்பிட்டார்.
ஆர். பிரேமதாச மைதானத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா 175/7 ரன்களைப் பதிவு செய்தது. இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். நடு ஓவர்களில் ரன் விகிதம் சற்று குறைந்தாலும், ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே அளித்த சிறப்பான இறுதி ஓவர் தாக்குதல் இந்தியாவை 170 ரன்களைத் தாண்ட வழிவகுத்தது.
"155 ரன்கள் என்பது போட்டிடியை நெருக்கடியாக மாற்றி இருந்திருக்கும். பந்துவீச்சில் அனைவரும் வழங்கிய பங்களிப்பைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் ஒரு அணியாக நல்ல நேரம் செலவிட்டு, அஹமதாபாத் பயணத்தின் போது அடுத்த ஆட்டங்களைப் பற்றிச் சிந்திப்போம்," என சூர்யகுமார் நம்பிக்கை தெரிவித்தார். அணியின் கூட்டு முயற்சி முக்கிய பங்காற்றியதாகக் கூறினார்.
இந்தியாவின் இலக்கை துரத்திய பாகிஸ்தான் துவக்கத்திலேயே தடுமாறியது. ஜஸ்பிரித் பும்ரா (2/17) மற்றும் ஹர்திக் பாண்டியா (2/16) ஆகியோர் கேப்டன் பாபர் அசாம் உட்பட பாகிஸ்தானின் டாப் ஆர்டரை சரித்தனர். இறுதியில், பாகிஸ்தான் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்த சிறப்பான வெற்றியின் மூலம் இந்தியா தனது சூப்பர் 8 தகுதியை உறுதி செய்தது.