துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனதை சுட்டிக் காட்டி பாகிஸ்தான் அணியின் பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டினார். மேலும், தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் ஆட்டத்தையும், அணியின் மனஉறுதியையும் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
கவாஸ்கர் அளித்த பேட்டியில் கவாஸ்கர் கூறியதாவது, "அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் அபாரமான தொடக்கக் கூட்டணியால், இந்தியா பவர்பிளேயில் ஆட்டத்தை முழுவதுமாகத் தன்வசப்படுத்தியது. அவர்கள் பாகிஸ்தானிடமிருந்து வெற்றியைத் தட்டிப் பறித்துவிட்டனர். ஒருவேளை முதல் ஆறு ஓவர்களில் பாகிஸ்தான் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால், இந்தியாவின் வெற்றி சற்று கடினமாகியிருக்கும். இந்தியா ஜெயித்திருக்காது என்று நான் சொல்லவில்லை, ஆனால் இவ்வளவு எளிதாக வெற்றி பெற்றிருக்காது," என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்திய அணியின் பேட்டிங் வரிசை அவ்வளவு பலமாக இருந்ததால், 2-3 விக்கெட்டுகளை இழந்திருந்தால்கூட அவர்களால் வெற்றி பெற்றிருக்க முடியும். அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 'டக் அவுட்' ஆன பிறகும், ஒரு ஓவருக்கும் மேல் மீதமிருக்கும் நிலையில் இந்தியா வெற்றி பெற்றது என்பது, அணியின் பேட்டிங் ஆழத்தைக் காட்டுகிறது" என்று கவாஸ்கர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்திய வீரர்களின் மனஉறுதியையும் கவாஸ்கர் பாராட்டத் தவறவில்லை. "இது வீரர்களின் மனோபாவம் சம்பந்தப்பட்டது. வீரர்கள் அனைவரும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். முடியாததையும் முடித்துக் காட்டும் திறமை தங்களுக்கு இருக்கிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். இதுதான் எந்த ஒரு அணியையும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்."
இந்தப் போட்டியில் நான்கு கேட்ச்களைத் தவறவிட்டனர், அது கிட்டத்தட்ட 20-30 ரன்கள் வரை கூடுதலாக செல்ல காரணமாக இருந்திருக்கலாம். ஆனாலும், இடைவேளைக்குப் பிறகு அவர்கள் மீண்டு வந்து பந்துவீசிய விதம் அற்புதமாக இருந்தது" என்றார் கவாஸ்கர்.
பாகிஸ்தான் அணி முதல் 10 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அவர்கள் இன்னும் 120 ரன்கள் வரை அடித்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு அவர்களை 171 ரன்களுக்குக் கட்டுப்படுத்தினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி, அபிஷேக் மற்றும் கில்லின் அதிரடியால் எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியின் இந்த முழுமையான ஆதிக்கம், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.