லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்போம் என்று அடம் பிடித்து வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தற்போது சர்வதேச அளவில் தனித்து விடப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கை வாரியம் கடிதம் எழுதியிருந்த நிலையில், இப்போது பாகிஸ்தானுக்கு நெருக்கமான ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானுக்குக் கடுமையான ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளது.
வரும் பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால், வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

நீண்ட காலமாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் "இரண்டாவது தாய்வீடாக" ஐக்கிய அரபு அமீரகம் திகழ்ந்து வந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காகப் பாகிஸ்தானில் போட்டிகள் நடக்காதபோது, அமீரக மைதானங்களில்தான் பாகிஸ்தான் அணி விளையாடியது. அந்த உரிமையை வைத்து, அமீரக கிரிக்கெட் வாரியம் தற்போது பாகிஸ்தான் வாரியத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், "எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்ட கால உறவு உள்ளது. கடந்த காலங்களில் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளோம். இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கும் உங்களின் முடிவு, கிரிக்கெட் விளையாட்டைப் பாதிக்கும். குறிப்பாக, ஐசிசியை நம்பியிருக்கும் சிறிய உறுப்பு நாடுகளுக்கு (Associate Nations) இது மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும்.
எனவே, ஒரு குடும்ப உறுப்பினராக நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். ஒரு சுமூகமான தீர்வைக் காணுங்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா, பாகிஸ்தான் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் லாகூரில் அவசரக் கூட்டம் நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமீரகம் மற்றும் இலங்கையின் அழுத்தம், ஐசிசியின் எச்சரிக்கை ஆகியவற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது பிடிவாதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஐசிசி மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு புதிய செயல்திட்ட வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில், இந்தியாவுடன் விளையாடப் பாகிஸ்தான் சம்மதம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் போட்டியைப் புறக்கணிக்க உத்தரவிட்டிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட் சமூகத்தில் ஏற்பட்ட தனிமைப்படுத்தல் காரணமாகப் பாகிஸ்தான் இறங்கி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.