நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. டி20 உலக கோப்பையில் துபாயில் நடைபெற்ற போது முதல் முறையாக இந்திய அணி பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.
இதற்கு 2022 டி20 உலக கோப்பையில் விராட் கோலி தக்க பதிலடி கொடுத்து பாகிஸ்தானை வீழ்த்தினார். இந்த நிலையில் மீண்டும் இந்திய பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையில் விளையாடுகிறது.

நியூயார்க் மைதானத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படுவதால் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி இருக்கும் இந்திய அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தங்களிடமும் சிறந்த பந்துவீச்சு படை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இப்போது தான் கேள்விப்பட்டேன். எங்கள் அணியில் அனைவரும் மொத்தமாக 892 டி20 போட்டிகள் விளையாடி இருக்கிறோம். இதன் மூலம் எங்களுக்கு எவ்வளவு பெரிய அனுபவம் இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பந்துவீச்சில் எங்களிடம் பும்ரா போன்ற நம்பர் ஒன் வீரர் இருக்கிறார்.
மேலும் சிராஜ் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு பிரமாதமாக செயல்பட்டு வருகிறார். இரண்டு உலக கோப்பையில் விளையாடி இருக்கிறார். மேலும் அவர் தற்போது பந்துவீச்சில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகின்றார். எங்கள் அணியில் பந்துவீச்சில் மட்டுமே நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.
மேலும் ஆடுகளமும் எங்களுக்கு சாதகமாக இருக்கின்றது. அயர்லாந்துக்கு எதிராக நாங்கள் பெற்று வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற ஒரு தொடக்கத்தை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். தற்போது இதே உத்வேகத்தை தொடர் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கின்றோம். நீங்கள் கடுமையாக உழைத்தால் நிச்சயமாக உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் போட்டியை நான் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன். இந்த போட்டியை காண அதிக ரசிகர்கள் வருவார்கள். அதை நினைக்கவே நெகிழ்ச்சியாக இருக்கின்றது. நாங்கள் எங்கள் விளையாட்டில் குறியாக இருக்கின்றோம். வேட்டையாடுவதையே ஒரே குறிக்கோளாக எங்கள் அணி வைத்திருக்கிறது. பாகிஸ்தானை வரும் ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தினால் நிச்சயம் அது எங்களுக்கு நல்ல நாளாக அமையும் என்று ஹர்திக் பாண்டியா கூறி இருக்கின்றார்.