நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணி இன்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். பாகிஸ்தான அணி அமெரிக்காவிடம் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் இந்திய வீரர் சூரியகுமார் யாதவுக்கு சவால் ஒன்றை விட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், என்னை பொறுத்தவரை விராட் கோலி தான் டாப் வீரர். இரண்டாவது இடத்தில் சூரிய குமார் இருக்கிறார்.

ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக சூரியகுமார் யாதவ் இதுவரை எந்த ஒரு பெரிய ஆட்டத்தையும் ஆடவில்லை. ரோகித் சர்மா ஏற்கனவே தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக ஐசிசி தொடர்களில் ரோகித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் இம்முறை சூரியகுமார் யாதவ் ரன் அடிக்க வேண்டும்.
அவர்தான் டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரர் என்றால், அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரன்களை குவிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எப்போதெல்லாம் பேட்டிங் செய்ய வந்தாரோ, அப்போது எல்லாம் அவர் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. ஆனால் மற்ற அணிக்கு எதிராக சூரியகுமார் யாதவ் நன்றாக விளையாடி இருக்கிறார்.அவருடைய திறமையில் எந்த குறையும் கிடையாது.
360 டிகிரி கோணத்தில் அனைத்து பகுதிகளிலும் ஷாட் அடிக்கக்கூடிய வீரர் நிச்சயமாக அவர் பேட்டிங் செய்வதை பார்க்க எனக்கு பிடிக்கும். தமக்கு கிடைத்த சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு இந்திய அணியில் தன்னுடைய இடத்தை சூரியகுமார் நிரூபித்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருக்கின்றது.
இம்முறை நல்ல திறமை வாய்ந்த இளம் வீரர்களையும் அனுபவம் வாய்ந்த வீரர்களையும் கலந்த கலவையாக இந்திய அணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. தங்களுடைய திறமையை இந்திய வீரர்கள் பயன்படுத்திக்கொண்டு உலக கோப்பையை வெல்ல வேண்டும். இப்போது முடியவில்லை என்றால் எதிர்காலத்தில் மிகவும் கடினமாக இந்திய அணிக்கு மாறிவிடும் என்று கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.