மும்பை : பாகிஸ்தானை மட்டும் வீழ்த்தினால் இந்தியாவுக்கு தான் டி20 உலக கோப்பை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜீத் சிங் சித்து தெரிவித்திருக்கிறார். உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி 8 மணிக்கு தொடங்குகிறது.
டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் இதுவரை எட்டு முறை மோதி இருக்கிறது. இதில் இந்தியா ஏழு முறையும், பாகிஸ்தான் ஒரு முறையும் வென்று இருக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள நவஜோத் சிங் சித்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைவதை இங்கு இருக்கும் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இது நமது கலாச்சாரமாகவே மாறிவிட்டது. தோல்வி ஒன்றும் மிகவும் கசப்பானது கிடையாது. ஆனால் இங்கு யாரும் தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நீங்கள் எந்த அணிக்கு எதிராக கூட தோல்வி அடைந்து கொள்ளலாம். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் தோற்க கூடாது. பாகிஸ்தானுக்கு எதிராக நீங்கள் வெற்றி பெற்றால் உலக கோப்பையை நீங்கள் வென்று விட்டீர்கள் என்று அர்த்தம்.
மக்கள் அப்படித்தான் இந்த போட்டியை பார்ப்பார்கள். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் பாராட்டும் உண்டு. மோசமாக செயல்பட்டால் விமர்சனமும் எழும். இதனால் யாரும் இந்த போட்டியில் தோற்க கூடாது என்று தான் நினைப்பார்கள். ஆனால் தற்போது சூழ்நிலைகள் மாறிவிட்டது. முன்பே போல் இரு அணிகளும் அதிக முறை தற்போது விளையாடுவது கிடையாது.
தற்போது இந்திய அணி உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் அணி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் வீழ்ந்ததை கூட ஒப்புக்கொள்ளலாம். ஆனால் அமெரிக்காவுக்கு எதிராக தோற்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பாகிஸ்தான் அணியில் பேட்டிங் வரிசையே கிடையாது. ஏதேனும் ஒரு வீரரை நம்பி கூட பாகிஸ்தான அணி இல்லை. ஆனால் இந்திய அணியின் சமநிலை சிறப்பாக இருக்கிறது. தற்போது உள்ள டி20 உலக கோப்பையில் இந்தியா சிறந்த அணியாக இருக்கின்றது என்று நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.