மும்பை: டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் ஞாயிற்றுகிழமை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டியில் யார் பவர்பிளேயை திறம்பட பயன்படுத்துகிறார்களோ, அவர்களே வெற்றி பெறுவார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். அபிஷேக் சர்மாவை வெகுவாகப் பாராட்டியதுடன், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களால் ஏற்படும் சவால்கள் குறித்தும் அவர் விவாதித்துள்ளார்.
இலங்கையின் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்த மிகப்பெரிய மோதலின் வெற்றியாளரைத் தீர்மானிப்பதில், பேட்டிங் பவர்பிளே மிக முக்கியப் பங்காற்றும் என்று ஃபிஞ்ச் குறிப்பிட்டுள்ளார். கடைசியாக இந்த இரு அணிகளும் மோதியபோது, ஆசிய கோப்பை இறுதிப் போட்டி உட்பட மூன்று முறை பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி தற்போது குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளதுடன், நிகர ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது. நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொழும்புக்கு வந்துள்ள இந்திய அணி, அந்த ஆட்டத்தில் இஷான் கிஷனின் 61 ரன்கள் உதவியுடன் பவர்பிளேயில் 86 ரன்களைக் குவித்தது, இது தற்போதைய தொடரில் ஆறு ஓவர் கட்டத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இது குறித்து பேசிய ஆரோன் பிஞ்ச், "குறிப்பாக இலங்கையில், களங்கள் சற்று மெதுவாகவும், அதிகமாகச் சுழலும் தன்மை கொண்டவையாகவும் இருப்பதால், முதல் ஆறு ஓவர்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இஷான் மற்றும் சஞ்சுவின் அதிரடி ஆட்டத்தை நாம் பார்த்தோம். ஆட்டத்தின் நடுப்பகுதியிலும், கடைசி கட்டத்திலும் ரன்கள் எடுப்பது கடினமாக இருக்கும் என்பதால், ஒரு நல்ல தொடக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்."
"கைகளில் விக்கெட்டுகளை வைத்துக்கொள்வதும், களத்தில் செட் ஆன ஒரு பேட்ஸ்மேன் இருப்பதும் மிகவும் அவசியம். புதிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே பவுண்டரிகளை அடிப்பது கடினமாக இருக்கும். இது அருண் ஜெட்லி ஸ்டேடியம் போன்ற சிறிய மைதானங்களில் இருந்து வேறுபட்டது, அங்கு பேட்ஸ்மேன்கள் எளிதாக அடித்து ஆடலாம். இந்த நிலைமைகளை கையாள தனி திறன் தேவை. சூழலுக்கு ஏற்ப மாற வேண்டும். விரைவாக மாற்றியமைக்கும் அணிகளே இங்கு வெற்றிபெறும்," என்று ஃபிஞ்ச் கூறினார்.
ஆஸ்திரேலியாவை 2021 ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கு வழிநடத்திய ஃபிஞ்ச், பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு குறிப்பிடத்தக்க சவாலை ஏற்படுத்துவார்கள் என்று கணித்தார். "கொழும்பு வரும்போது, இந்தியாவில் உள்ள களங்களுடன் ஒப்பிடும்போது உங்கள் சிந்தனை செயல்முறையை சற்று மாற்றிக்கொள்ள வேண்டும், இங்கு களங்கள் பொதுவாக சற்று மெதுவாக இருக்கும்."
"ஆஸ்திரேலியா அயர்லாந்தை வீழ்த்திய ஆட்டத்தில் 22 முறை இரண்டு ரன்கள் ஓடியதைக் கண்டோம். அவர்கள் வித்தியாசமான முறையில் அழுத்தம் கொடுத்தனர். எனவே, உங்கள் மனநிலையைச் சற்றே மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் குறிவைப்பதற்குப் பதிலாக, உங்களுக்குச் சாதகமான பந்துவீச்சாளர்களை நீங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும். ஏனெனில், பெரிய பவுண்டரிகள் என்பதால், தவறாக அடிக்கும் எந்த ஷாட்டும் விக்கெட்டாக வாய்ப்புள்ளது," என்று அவர் கூறினார்.
இந்திய அணி நன்றாகச் செயல்படுவார்கள், ஏனெனில் அந்த அணியில் ஏராளமான அனுபவம் உள்ளது. இடது மற்றும் வலது கை பேட்ஸ்மேன்களின் நல்ல கலவை உள்ளது. இது மிகவும் முக்கியமானது. இரண்டு வலது கை அல்லது இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தால், எதிர் அணி சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து அதைச் சாதகமாக்கிக்கொள்ள முடியும். அதனால், இந்திய அணி அனைத்து பிரிவுகளையும் திறம்பட கவர் செய்துள்ளது," என ஃபிஞ்ச் நம்பிக்கை தெரிவித்தார்.
"அபிஷேக் சர்மாவை உள்ளடக்கிய எந்த அணியும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாகவே இருக்கும். அவர் ஒரு சூப்பர் ஸ்டார், முதல் பந்திலிருந்தே பந்துவீச்சைத் தகர்க்கும் அவரது திறன் உலகில் வேறு எந்த வீரராலும் ஈடு செய்ய முடியாதது. அவர் விரைவில் நலம்பெற்று, விளையாடுவதை நான் காண ஆவலுடன் உள்ளேன். அவருக்கு விரைவான குணமடைதலுக்கு வாழ்த்துகிறேன்," என்று குறிப்பிட்டார்.
நமீபிய கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் இந்தியாவிற்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதைச் சுட்டிக்காட்டிய ஃபிஞ்ச், பாகிஸ்தானின் உஸ்மான் தாரிக் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணிக்கு இதேபோன்ற பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.