கொழும்பு: டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணி நெதர்லாந்துக்கு எதிராகத் திக்கித் திணறி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் வெட்டவெளிச்சமாகிவிட்டதாகவும், இந்திய அணி தனது போட்டிகளில் தோல்வியடைந்தால் அது பாகிஸ்தானுக்கே ஆபத்தாக முடியும் என்றும் முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. வெற்றி பெற்றாலும், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மோசமாகச் சொதப்பியது. இது குறித்துப் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

குரூப் ஏ பிரிவின் தற்போதைய நிலவரம் குறித்துப் பேசிய ரஷித் லத்தீப், "வானிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மை ஏற்கனவே இரண்டு, மூன்று அணிகளைப் பாதித்துள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதால், அந்தப் போட்டிக்கான புள்ளிகள் கிடைக்காது. எனவே, இந்திய அணி தனது அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியடைந்தால், அது பாகிஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பைச் சிக்கலாக்கும்" என்று கணித்துள்ளார்.
அதாவது, இந்தியா அனைத்து அணிகளையும் வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தால், இரண்டாவது இடத்திற்குப் பாகிஸ்தான் எளிதாக வர முடியும். ஆனால் இந்தியா தோல்வியடைந்தால், புள்ளிப்பட்டியலில் குழப்பம் ஏற்பட்டு ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் வெளியேற வாய்ப்புள்ளது. "பாகிஸ்தான் தனது அடுத்த மூன்று போட்டிகளிலும் (அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து) வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
நெதர்லாந்துக்கு எதிரான போட்டி குறித்துப் பேசிய அவர், "பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அதில் நிறைய சிரமங்கள் இருந்தன. நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு பாகிஸ்தானின் குறைகளை அம்பலப்படுத்திவிட்டனர். குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்டிங் மிகவும் பலவீனமாக உள்ளது" என்று விமர்சித்தார்.
கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங் வரிசை மற்றும் ஆட்டம் குறித்தும் லத்தீப் அதிருப்தி தெரிவித்தார். "பாபர் அசாம் மூன்றாவது இடத்தில் தடுமாறியதால், இப்போது நான்காவது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அது அவருக்குச் சரியான இடம்தான். அவர் இன்னிங்ஸை இறுதிவரை கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் தேவையில்லாத ஷாட் அடித்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். வழக்கமாகப் பாதுகாப்பாக விளையாடும் அவர், இம்முறை அவசரப்பட்டுத் தானும் நெருக்கடிக்கு ஆளாகி, அணியையும் சிக்கலில் மாட்ட வைத்தார்" என்றார்.
மேலும் அணியின் தேர்வு குறித்துப் பேசிய அவர், "அணியில் மூன்று விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் கூட விக்கெட் கீப்பிங் செய்வதில்லை. ஃபகர் ஜமான் போன்ற வீரர்கள் அணியில் இருந்தும் விளையாட வைக்கப்படவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஓரளவுக்குச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இதே நிலை நீடித்தால் அமெரிக்கா மற்றும் நமீபியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி பெரும் சிக்கலைச் சந்திக்கும்" என்று எச்சரித்துள்ளார்.
இறுதியாக, இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்த கேள்விக்கு, "அது வீரர்கள் கையில் இல்லை. இரண்டு நாட்டு அரசுகளும் தான் முடிவு செய்ய வேண்டும். தற்போதைய சூழலில், பாகிஸ்தான் பிரதமர் விளையாட மாட்டோம் என்று தெளிவாகக் கூறிவிட்டார். அதனால் போட்டி நடக்க வாய்ப்பில்லை" என்று ரஷித் லத்தீப் தெரிவித்தார்.
"பாகிஸ்தான் ஜெயிக்கல.. நாங்க தான்.." மேட்ச் முடிந்தவுடன் வேதனையை கொட்டிய நெதர்லாந்து வீரர்!