இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று அடம்பிடித்துவிட்டு, கடைசி நேரத்தில் அந்த முடிவை மாற்றிக்கொண்ட பாகிஸ்தான், தற்போது கிரிக்கெட்டைச் சிலர் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக, மறைமுகமாக இந்தியாவை குற்றம் சாட்டியுள்ளது. 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் வரும் 15ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் விளையாடப் போவதில்லை என்று முதலில் அறிவித்த பாகிஸ்தான், பின்னர் ஐசிசி கொடுத்த அழுத்தத்தால் தனது முடிவை மாற்றிக்கொண்டது.
இந்த உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி இல்லை என பாகிஸ்தான் அரசு தான் முதன்முதலில் அறிவித்து இதை அரசியல் ஆக்கியது. ஆனால், இப்போது அதற்கு நேர்மாறாக இந்தியாவை குற்றம் சுமத்தி கருத்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உண்மையில், ஐசிசி-யின் கடும் நடவடிக்கைகளுக்கு பயந்து தான் பாகிஸ்தான் சில நாட்களில் தங்கள் நாடகத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுடன் ஆட ஒப்புக் கொண்டது. இந்த அவமானத்துக்கு பிறகும் இந்தியா தான் எல்லாவற்றையும் செய்கிறது என்பது போன்ற பொய்யான பிம்பத்தை கட்டமைக்க முயன்று இருக்கிறது.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கிரிக்கெட்டைத் தாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். "கிரிக்கெட் என்பது நாம் அனைவரும் நேசிக்கும் ஒரு விளையாட்டு. ஆனால் அது தற்போது அரசியலாக்கப்படுவது வருத்தமளிக்கிறது. கிரிக்கெட்டை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை. விளையாட்டு விளையாட்டாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் விளையாடச் சம்மதித்தது எங்கள் பலவீனம் அல்ல, அது எங்கள் பெருந்தன்மை என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது. இதுகுறித்து தாஹிர் மேலும் கூறுகையில், "இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் எங்களுடன் தொடர்பில் இருந்தன. சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், விளையாட்டு அரசியலாக்கப்படுவதை எதிர்த்தும் நாங்கள் விளையாட முடிவு செய்தோம். அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பெருந்தன்மையுடன் விளையாடச் சம்மதித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காகத் தங்களால் இந்தியா வர முடியாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் ஐசிசி பாதுகாப்பு உத்திரவாதம் அளித்தும் வங்கதேசம் வர மறுத்ததால், அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது. வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்தான் பாகிஸ்தான் முதலில் இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.
ஆனால், போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தான் அணிக்குத் தடை விதிக்கப்படும் என்றும், நிதியிழப்பு ஏற்படும் என்றும் ஐசிசி எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொண்டு இந்தியாவுடன் விளையாடத் தயாராகியுள்ளது. ஆனால், வெளியே சொல்லும்போது இதைத் தங்கள் பெருந்தன்மை என்று பாகிஸ்தான் அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது. எப்போது தான் பாகிஸ்தான் திருந்துமோ?
எது எப்படியோ, பல்வேறு நாடகங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஆட்டம் உறுதியாகியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.