துபாய்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆடுகளத்திற்கு வெளியே வார்த்தை போர் இப்போதே தொடங்கிவிட்டது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக், இந்திய அணியை வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியுள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய உஸ்மான் தாரிக், 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

உஸ்மான் தாரிக் பந்துவீசும் முறை மிகவும் வித்தியாசமானது. பந்தை வீசுவதற்கு முன் கையை நீண்ட நேரம் நிறுத்தி, பின்னர் திடீரென வீசுவார். இவரது இந்தச் செயல் விதிமீறல் என்று பல பேட்ஸ்மேன்கள் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், லாகூரில் நடைபெற்ற இரண்டு சோதனைகளிலும் இவரது பந்துவீச்சு முறை சரியானதுதான் என்று நிரூபிக்கப்பட்டு, டி20 போட்டிகளில் பந்துவீச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது அடுத்த போட்டியில் இந்தியாவை எதிர்கொள்வது குறித்து உஸ்மான் தாரிக் பேசியுள்ளார். அதில், "இந்திய வீரர்கள் என் பந்துவீச்சை எதிர்கொள்வதை பற்றி பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் என் பந்துவீச்சு முறையைப் பற்றி அதிகம் விவாதிப்பதே அவர்களுக்கு இருக்கும் அழுத்தத்தைக் காட்டுகிறது." என்று கூறியுள்ளார்.
மேலும், "ஊடகங்களில் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. நான் எனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். பயிற்சியில் என்ன செய்தேனோ அதை களத்தில் செயல்படுத்தவே விரும்புகிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான வெற்றி தோல்வி கணக்கு குறித்துப் பேசிய அவர், "நாம் எப்போது தோற்க ஆரம்பித்தோம் என்பதை மட்டும் பார்க்கக்கூடாது. ஆரம்பத்திலிருந்தே பார்த்தால் பாகிஸ்தான் அணிதான் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதனால் பழைய வரலாற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். இது உலகக்கோப்பை என்பதால் நாங்கள் வெல்லவே முயற்சிப்போம்" என்று கூறியுள்ளார்.
உஸ்மான் தாரிக் கடந்த 23 டி20 இன்னிங்ஸ்களில் தொடர்ந்து குறைந்தது ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த சாதனை இதுவாகும். எனினும், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா 7 முறை பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே (2021ல்) வென்றுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடர்ந்து 5 வெற்றிகளைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.