கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்தாக வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு நாடகங்களுக்குப் பிறகு, இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் சம்மதித்த நிலையில், தற்போது மழையால் இந்தப் போட்டிக்குத் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ள இந்தப் போட்டிக்கு, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் கடந்த சில நாட்களாகவே வானிலை மோசமாக உள்ளது. இதனால் சில பயிற்சி ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், போட்டி நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை அன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (பிப்ரவரி 14) அன்று 65 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது ஞாயிற்றுக்கிழமையும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் வானிலை அறிக்கையின்படி, போட்டி நாளன்று 50 சதவீதம் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு இடியுடன் கூடிய மழையும், இரவு 8 மணிக்கு லேசான மழையும் பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி தாமதமாகத் தொடங்கவோ அல்லது போட்டியின் நடுவே தடைபடவோ அதிக வாய்ப்புள்ளது.
பிரேமதாசா மைதானம் பொதுவாகவே சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானது. இந்நிலையில், மழையால் ஆடுகளம் பாதிக்கப்பட்டால் டாஸ் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கும். ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்தால், ஸ்விங் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசவே விரும்பும்.
ஒருவேளை, டக்வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என்று கணித்தால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்து ஒரு நல்ல ஸ்கோரை நிர்ணயிக்க முயற்சிக்கும்.
ஒருவேளை மழை காரணமாகப் போட்டி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். லீக் சுற்றுகளுக்கு மாற்று நாள் (Reserve Day) கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி, குரூப் ஏ பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலா 4 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. ஆனால் நெட் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. போட்டி ரத்தானால், இரு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்று தங்கள் பிரிவில் மொத்தம் 5 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது சிறந்த நெட் ரன் ரேட் காரணமாக இந்திய அணி முதலிடத்தைப் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு எளிதாகத் தகுதி பெறும்.
இந்த முக்கியப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியையும், பாகிஸ்தான் அணி நமீபியாவையும் எதிர்கொள்ள உள்ளன. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 7-1 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையேயான கடந்த 5 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.