லாகூர்: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கும் தனது முடிவை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமின் உல் இஸ்லாம், கோரிக்கை விடுத்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. லாகூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் குவாஜாவும் உடன் அமீன் இருந்தார்.
பாகிஸ்தான் தங்களுக்கு அளித்த ஆதரவுக்கு இஸ்லாம் பாராட்டு தெரிவித்த போதிலும், புறக்கணிப்பு முடிவை கைவிட நக்வியை அமீன் வலியுறுத்தினார். இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐக்கிய அமீரக கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் இதே கோரிக்கையை முன்வைத்து நக்விக்கு அழுத்தம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பிரச்சினை பிசிசிஐ, வங்கதேசத்திற்கும் இடையேயான அரசியல் மற்றும் ஈகோ போரில் தொடங்கியது. இந்தியாவில் வங்கதேசத்திற்கு எதிரான மனநிலை எழுந்ததால், 2026 ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாஃபிஸுர் ரஹ்மானை நீக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பிசிசிஐ கோரியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,வங்கதேசம் பாதுகாப்பு அச்சுறுத்தலைக்' காரணம் காட்டி உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க இந்தியா செல்ல மறுத்தது. இது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.இதனையடுத்து ஐசிசி நடத்திய ஆய்வில், எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி வங்கதேசத்தின் கருத்தை மறுத்தது. ஆனால் BCB அந்த முடிவை ஏற்காததால் மூன்று வார கால இழுபறி காணப்பட்டது. இறுதியில், ஐசிசி வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்தை உலகக் கோப்பை அணியில் சேர்த்தது.
வங்கதேசத்தின் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்த ஒரே ஐசிசி உறுப்பினர் பாகிஸ்தான் என்பதால், இந்த முடிவை 'அநீதி' என பாகிஸ்தான் கடுமையாக விமர்சித்தது.பாகிஸ்தான் அரசு இகொழும்பில் இந்தியாவுக்கு எதிராக விளையாடக் கூடாது என உத்தரவிட்டது. இது வங்கதேசத்துடன் ஒற்றுமையை வெளிப்படுத்த எடுக்கப்பட்டதாக பின்னர் விளக்கமளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் மொஹ்சின் நக்வியும் இந்த விவகாரத்தில் மௌனம் காத்தாலும், மிகப்பெரிய இந்தப் போட்டி ரத்தானால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க ஐசிசி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் இருந்து இறுதி ஒப்புதலுக்காக மொஹ்சின் நக்வி காத்திருக்கிறார். இந்த விவகாரம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்திற்காக இந்த புறக்கணிப்பு முடிவை பாகிஸ்தான் எடுத்தாலும், தற்போது வங்கதேசம் டிவிஸ்ட் அடித்துள்ளது.