மும்பை: டி20 உலககோப்பை போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா, பாகிஸ்தான் போட்டி ஞாயிற்றுகிழமை கொழும்புவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வெல்லும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
எனினும், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக்கை இந்திய அணி வீரர்கள் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பரபரப்பான இந்தபோட்டியில் இந்திய அணி அமைதியாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும் என ஹர்பஜன் அறிவுறுத்தினார்.

இது குறித்து பேசிய அவர், "இந்தியா நிச்சயம் வெற்றி பெறும். பாகிஸ்தான் அணியில் உஸ்மான் தாரிக் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இருக்கிறார். அவரை எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். இந்திய அணி பலமானது. அழுத்தம் இல்லாமல் விளையாடி வெற்றியைப் பெறும் என நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
உஸ்மான் தாரிக் டி20 போட்டிகளில் குறைந்த ரன்களைக் கொடுத்து பல விக்கெட்டுகளை எடுத்தபோதும், அவரது பந்துவீச்சு முறை விதிகளுக்கு உட்பட்டதா என கேள்விகள் எழுப்பப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. எனினும் அவருடைய பந்துவீச்சு ஸ்டைலை ஐசிசி 2 முறை சோதித்து, பிரச்சினை இல்லை என அனுமதித்துள்ளது.
மற்றொரு முன்னாள் இந்திய வீரரான நயன் மோங்கியாவும் இந்தியா வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், "இது சுவாரஸ்யமான போட்டியாக அமையும், இந்தியா வெல்ல வேண்டும். இந்தியாவின் பேட்டிங், பந்துவீச்சு, கேப்டனின் தலைமை சிறப்பாக உள்ளது. கிரிக்கெட்டில் தன்னம்பிக்கையே பிரதானம். பாகிஸ்தான் தொடர்ச்சியாக ஏழு, எட்டு ஐசிசி தொடர்களில் தோற்றுள்ளதால், அவர்களுக்கு பெரும் அழுத்தம் இருக்கும்" என்றார்.
"கிரிக்கெட் வெகுவாக மாறிவிட்டது. இந்திய இளம் வீரர்கள் அச்சமின்றி விளையாடுகிறார்கள். ஒரு ஓவரில் பவுண்டரி அல்லது சிக்ஸர் கூட ஆட்டத்தின் போக்கை மாற்றும். ஹர்திக் பாண்டியா அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்படுவார். பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அவருக்கு வலுவான சாதனைகள் உள்ளது"என மோங்கியா நம்பிக்கை தெரிவித்தார்.