கொழும்பு: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது மிகப்பெரிய வெற்றி ஒன்றும் கிடையாது.
ஏனென்றால் பாகிஸ்தான் அணி பல ஆண்டுகளாகவே பலம் குன்றிய அணியாகவே இருக்கின்றது. இதனால் பாகிஸ்தானை வீழ்த்தி விட்டோம் என்பதால் நமது அணி வீரர்கள் முக்கிய குறிக்கோளான உலகக் கோப்பையை மீண்டும் வெல்லும் கனவை மறந்து விடக்கூடாது.

லீக் சுற்று போட்டிகள் இந்தியாவுக்கு சில நெருக்கடிகளையும் பல எளிதான ஆட்டங்களையும் வழங்கினாலும், இனி சூப்பர் 8 சுற்று மிகவும் அபாயகரமாக மாறிவிடும். அதுவும் இந்திய அணி பலம் வாய்ந்த அணிகளான ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளை எதிர் கொள்ள வாய்ப்பு உள்ளது.
இந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்ல முடியும். இந்த அணிகளுக்கு எதிராக இந்திய அணி ஒரு தவறு செய்தால் கூட அது போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றாலும், பல தவறுகளை செய்திருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. உலகின் நம்பர் ஒன், டி20 பேட்ஸ்மேன் என்ற பெயரை பெற்றுள்ள அவர், நடப்பு உலக கோப்பை தொடரில் இன்னும் இரு ரன் கூட அடிக்கவில்லை. அவர் மீது பல மடங்கு எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அது அவருக்கு தேவையில்லாத நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் சூப்பர் 8 சுற்றுப்போட்டிகளில் அபிஷேக் ஷர்மா தன்னுடைய பழைய பார்மை மீட்க வேண்டும் இதேபோன்று நடுவரிசையில் இந்திய அணி தடுமாற்றத்தை காண்கிறது. திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா போன்றோர் பேட்டிங்கில் தொடர்ந்து அதிரடி காட்டினால் மட்டுமே அது இந்தியாவுக்கு சாதகமாக மாறிவிடும். அனைத்து போட்டிகளிலும் இசான் கிஷன் வந்து காப்பாற்றுவார் என எதிர்பார்க்க கூடாது.
இதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பில்டிங்கில் மிகவும் மோசமாக செயல்பட்டது. இந்திய அணியின் வெற்றி உறுதி என்ற நிலை இருந்தபோதும், பாகிஸ்தானின் சில கேட்ச் வாய்ப்புகளை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். இது மிகப் பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக இந்த தவறை இந்தியா செய்தால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த தவறுகளை இந்திய அணி நிர்வாகம் கவனித்து சரி செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.