2026 டி20 உலககோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்கப்படுவதாக கூறியதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு, உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க அணிக்கு அனுமதி அளித்திருந்தாலும், இந்தியாவுக்கு எதிரான தங்கள் லீக் போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் எந்த மாற்றமும் இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மோதல் இந்திய அணிக்குச் சாதாரணமாக ஒரு 'வாக்கவுட்' வெற்றியாகவே அமையும் என்று குறிப்பிட்ட அவர், "வெறும் பாத்திரங்கள் அதிக சத்தம் போடும்" என்று பாகிஸ்தானை விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "வெறும் பாத்திரங்கள்தான் அதிக சத்தம் போடும். பாகிஸ்தான் பயந்துவிட்டது. அண்மையில் நடைபெற்ற U19 உலகக் கோப்பையிலும் அவர்கள் தோல்வியடைந்தனர். இதனால், போட்டியில் இருந்து வாக்கவுட் கொடுக்க நினைக்கிறார்கள். அவர்கள் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும், இந்திய அணிக்கு வெற்றி என்பது உறுதியானதுதான். அவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை. ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அனைத்து போட்டிகளையும் விளையாடினார்கள்," என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
இந்த இரு அணிகளும் பிப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் மோதவுள்ளன. ஆனால், பாகிஸ்தான் அணி இந்த முக்கியமான ஆட்டத்தில் பங்கேற்குமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இரு அணிகளும் 'குரூப் ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளன. நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளும் இந்தப் பிரிவில் அடங்கும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பையில் இதுவரை எட்டு முறை மோதியுள்ளன. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரிலேயே இரு அணிகளும் இருமுறை நேருக்கு நேர் சந்தித்தன. 2007 குழு நிலை ஆட்டத்தில் இந்தியா பவுல்-அவுட் முறையில் வெற்றி பெற்றது. மீண்டும் இறுதிப் போட்டியிலும் மோதியதில், இந்தியா ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் டி20 உலகக் கோப்பையை முத்தமிட்டது.
அடுத்து 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் மோதியபோது, இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஒரு எளிதான வெற்றியைப் பதிவு செய்தது. 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளிலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்திலும், அடுத்ததாக ஆறு விக்கெட் வித்தியாசத்திலும் என்று அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்தது.
பாகிஸ்தான் அணி, 2021 ஆம் ஆண்டு தொடரில் இந்திய அணிக்கு எதிரான தொடர் தோல்விகளின் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்தப் போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. எனினும், டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான அவர்களின் ஒரே வெற்றி இதுவேயாகும். அதற்குப் பிறகு, 2022 ஆம் ஆண்டில் நான்கு விக்கெட் வித்தியாசத்திலும், 2024 ஆம் ஆண்டில் ஆறு ரன்கள் வித்தியாசத்திலும் மீண்டும் தோல்வியடைந்தனர்.