IND vs PAK: பாக்.அதிரடி வீரரை பும்ரா போல்ட் ஆக்குவார்.. பாபர் அசாம் டெஸ்ட் மேட்ச் ஆடுவார்-ஸ்ரீகாந்த்
கொழும்பு: 2026 டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அதிரடி வீரர் சாகிப்சாதா ஃபர்ஹானால் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 29 வயதான ஃபர்ஹான், நடப்புத் தொடரில் 2 ஆட்டங்களில் 120 ரன்கள் (சராசரி 60, ஸ்ட்ரைக் ரேட் 166.66) குவித்து அபாரமாக ஆடியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகளில் 2 அரை சதங்களுடன் 155 ரன்கள் (சராசரி 51.66) குவித்து ஃபர்ஹான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த், "ஃபர்ஹானை அனைவரும் பெரிதுபடுத்துகிறார்கள், ஆனால் நாளை அவர் தோல்வியடைவார்.

பும்ரா அவரை க்ளீன் போல்ட் ஆக்குவார் அல்லது வருண் சக்கரவர்த்தி பந்தில் அவரது ஸ்டம்புகள் சிதறும். அவர் ஆட்டமிழந்தால் பாகிஸ்தான் அணி முடிந்தது. பாகிஸ்தான் பேட்டிங் சுத்தமாக நம்பிக்கையளிக்கவில்லை," என்று குறிப்பிட்டார்.
"பாகிஸ்தான் பேட்டிங்கில் ஒரு ஃபர்ஹான் மட்டுமே இருக்கிறார். ஒரு தனி பேட்ஸ்மேனை வைத்து உலகக் கோப்பை போட்டியை எப்படி வெல்ல முடியும்? பாபர் அசாம் டெஸ்ட் மேட்ச் போன்று ஆடுவார், சல்மான் ஆஹா பாபர் அசாம் 2.0 ஆக உள்ளார். ஷாதாப் கான் மட்டுமே மிடில் ஆர்டரில் ஆபத்தானவர். அவர்களுக்கு பும்ராவையும், வருண் சக்கரவர்த்தியையும் எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை," எனக் காட்டமாகக் கூறினார்.
"பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் திறமையானவர்கள். இந்தியர்களும் இதுவரை சுழலை எதிர்கொள்வதில் சிறப்பாக இல்லை. சில சமயங்களில் மத்தியவரிசை பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறியுள்ளனர். இந்திய அணி பலம் வாய்ந்ததாக இருந்தாலும், சிறந்த சுழற்பந்து தாக்குதலை எதிர்கொள்ளும்போது நிம்மதியாக இல்லை," என்றார்.
சமீபத்திய மற்றும் ஒட்டுமொத்த வரலாறு பாகிஸ்தானுக்குச் சாதகமாக இல்லை. அவர்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய கடந்த 5 டி20 சர்வதேச போட்டிகளிலும், 8 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறையும் தோல்வியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications