மும்பை: டி20 உலககோப்பையில் தங்கள் நாட்டு உடன் விளையாடுங்கள் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பாகிஸ்தானிடம் கெஞ்சியதாக AI ஆடியோ ஒன்றை பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒளிபரப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ பதிவு முற்றிலும் போலியானது என்றும், அது தன்னுடையது அல்ல என்றும் திட்டவட்டமாக ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ள அவர், “இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி குறித்த எனது வீடியோ கருத்துகளில், என் குரல் AI மூலம் திரிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு என்னுடையவை அல்ல. ஆகவே, இந்த தவறான தகவல்களை யாரும் நம்பவோ, பரப்பவோ வேண்டாம். இதுபோன்ற போலியான வீடியோக்களைக் கண்டால், புகாரளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் தனது 'X' கணக்கில் பதிவிட்டார்.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் தொகுத்து வழங்கிய பாகிஸ்தானிய கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் தான் இந்த சர்ச்சைக்குரிய ஆடியோ ஒளிபரப்பானது. ARY News தொலைக்காட்சியில் வெளியான அந்த நிகழ்ச்சியில், நடந்துகொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை விவாதத்தின் போது, சுக்லாவின் குரலைப் போலவே ஒரு AI குரல் பயன்படுத்தப்பட்டது. அதில், இந்தியாவுக்கு எதிரான புறக்கணிப்பு முடிவை மாற்ற பிசிசிஐ கெஞ்சியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில், ஷோயப் மாலிக், "பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவின் ஒரு கிளிப்பை உங்களுக்குக் காட்டுகிறேன்" என்று கூறிவிட்டு, போலியான ஆடியோவை இயக்கினார். அதில், சுக்லாவின் குரலில் ஒலித்ததாவது, "இந்தியாவுக்கு எதிராக விளையாட பாகிஸ்தானை சம்மதிக்க வைக்க பிசிசிஐயின் தொடர் கோரிக்கைகளை அடுத்து ஐசிசி பிரதிநிதி எடுத்த பேச்சுவார்த்தையின் பலனைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கிரிக்கெட்டிற்கு முதலிடம் அளிக்கும் ஒரு நல்ல, சுமுகமான தீர்வு இது. இதுதான் செய்யப்பட்டுள்ளது," என்று ஒளிபரப்பப்பட்டது.
உண்மையில், ராஜீவ் சுக்லா அப்படி எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை. அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு நன்றி தெரிவித்து, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்ததற்கு பாராட்டு தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியங்களுடன் (PCB, BCB) நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே இந்த நல்ல முடிவு எட்டப்பட்டதாக சுக்லா விளக்கினார்.
கிரிக்கெட்டிற்கு இந்த முடிவு மிக முக்கியமானது. கிரிக்கெட் தொடர வேண்டும், உலகக் கோப்பை இனி ஒரு பெரிய வெற்றியாக அமையும். ஐசிசியைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய சாதனை தான்," என்று அவர் கூறினார். அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.