மும்பை: டி20 உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக பேட்ஸ்மேன் ஆன ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மாவுக்கு பந்துவீச வாய்ப்பளித்தது அவர்களை வேண்டுமென்றே அவமானப்படுத்துவதற்கான செயலா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியான நிலையில், பார்ட் டைம் பவுலர்களுக்கு சூர்யகுமார் வாய்ப்பளித்தார்.
முதலில் பேட் செய்த இந்திய அணி, சவாலான பிட்ச்சில் 175/7 ரன்கள் எடுத்தது. பின்னர், பாகிஸ்தானை 18 ஓவர்களில் வெறும் 114 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் இந்திய அணி ஏழு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது. இதில் பார்ட் டைம் பந்துவீச்சாளர்களான திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இணைந்து மூன்று ஓவர்கள் வீசினர்.

பாகிஸ்தான் அணி 12 ஓவர்களில் 78 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், திலக் வர்மா பந்துவீச அழைக்கப்பட்டார். அவர் தனது முதல் பந்திலேயே ஷதாப் கானை 14 ரன்களில் அவுட்டாக்கினார். இது பாகிஸ்தான் பேட்டிங் வரிசையின் பலவீனமான நிலையை தெளிவுபடுத்தியது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒருபோதும் இரண்டிற்கும் மேற்பட்ட ஓவர்கள் வீசியிராத ரிங்கு சிங், 17வது ஓவரில் பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் கடைசி கட்ட பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஒன்பது ரன்களை மட்டுமே வழங்கினார். இந்தியா பாகிஸ்தானை அவமானப்படுத்த இது ஒரு உத்தியா என்று கேட்கப்பட்டபோது, மொயின் அலி மற்றும் ரவி போபரா இருவரும் ஆம் என்றுஒப்புக்கொண்டனர்.
"இது ஒருவித ஏளனத்தின் சைகையாகவே தோன்றியது," என்று மொயின் அலி கூறினார். இது குறித்து பேசிய அவர், "ஜஸ்பிரிட் பும்ரா நீண்ட ஓய்வுக்குப் பிறகுதான் அணிக்குத் திரும்பியிருப்பதால், அவரை மேலும் பந்துவீசச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேகப்பந்துவீச்சாளர்களை அந்த பிட்ச்சில் பயன்படுத்த வேண்டியதும் இல்லை, அவர்கள் நேராக பந்துவீசினார்கள்," என்று குறிப்பிட்டார்.
ரவி போபராவும் மொயின் அலியின் கருத்தை ஏற்றுக்கொண்டார். "ஆம், இந்திய அணி விளையாட்டில் மிக அதிக முன்னணியில் இருந்ததால், அவ்வாறு நடந்திருக்க வாய்ப்புள்ளது," என்றார் அவர். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஒருதலைப்பட்சமான போட்டிகளில் இது போல் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவது வழக்கம். இது எதிர்காலத்தில் அவர்களுக்குத் தேவைப்படும்போது தயாராக இருக்க உதவும் அவரது ஒரு உத்தி ஆகும்.
போட்டி குறித்து போபரா, "இரு அணிகளுக்கும் இடையிலான இடைவெளி இன்று தெளிவாகத் தெரிந்தது. இது பாகிஸ்தானுக்கு மிகவும் கஷ்டமான தருணமாக அமைந்தது," என்று குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த மோயின் அலி, "இந்த ஆட்டம் நீண்ட காலத்திற்குப் பிறகு மிக நெருக்கமான போட்டியாக இருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். பாகிஸ்தானுக்கு நல்ல சுழற்பந்துவீச்சாளர்களோடு, இலங்கையின் பிட்சுகளும் சாதகமாக இருக்கும் என எண்ணினேன். ஆனால் ரவி குறிப்பிட்டதைப்போல், இந்தியா சற்றும் ஒப்பிட முடியாத அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது," என்று தெரிவித்தார்.