கொழும்பு: டி20 உலகக் கோப்பை போட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மைதானங்களில் இருக்கைகள் காலியாக இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் காலியான இருக்கைகள் தென்படுவது, சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல நாட்களுக்கு முன்னரே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், BookMyShow இணையதளத்தில் டிக்கெட்டுகள் விற்பனையாகாமல் இருந்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. முதல் இன்னிங்ஸில் பத்து ஓவர்கள் முடிந்த பிறகும், இந்தப் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் BookMyShow தளத்தில் தொடர்ந்து விற்பனையாகி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முக்கியப் போட்டிகளுக்கு டிக்கெட்டுகள் கிடைப்பது அரிது என்னும் நிலையில், காலியான இருக்கைகளை ரசிகர்கள் கண்டது இலங்கை ஊடகங்களின் "அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன" என்ற முந்தைய அறிவிப்புக்கு முரணாக அமைந்தது.
ஐசிசியின் அதிகாரப்பூர்வ டிக்கெட் பங்காளரான BookMyShow-வில், டாஸுக்கும் பிறகும் விற்கப்படாமல் இருந்த டிக்கெட்டுகளின் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். N 'A Lower' பிரிவில் 10,000 இலங்கை ரூபாய்க்கு (இந்திய மதிப்பில் தோராயமாக ₹2900) டிக்கெட்டுகள் தொடர்ந்து விற்பனையில் இருந்தன. ஆனால் முன்பு இந்த டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என சிலர் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டனர்.
கள்ளச்சந்தை விற்பனைகளைத் தடுக்கவும், டிக்கெட் தேவையை முறையாக நிர்வகிக்கவும் அனைத்து டிக்கெட்டுகளையும் ஆன்லைன் தளங்களில் தரப்பட்டது. ஆனால், BookMyShow இணையதளம் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் போதும் அதன் மோசமான சேவைக்காக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் உடன் விளையாடுவது இந்திய ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையா? இல்லை பாகிஸ்தான் இந்தப் போட்டியை புறக்கணிக்கும் என எதிர்பார்த்து பலர் டிக்கெட்டை வாங்கவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக இலங்கை வாரியம் கூறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
போட்டியில், இந்தியா தொடக்கத்திலேயே தடுமாறியது. அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆனார். இருப்பினும், இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து, இந்தியாவை 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுக்க உதவினார். தசைப்பிடிப்புடன் போராடிய அவர், 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்து, திலக் வர்மாவுடன் (12 ரன்கள்) 87 ரன்கள் கூட்டணி அமைத்தார். ஒன்பதாவது ஓவரில் சாய்ம் அயுப் பந்துவீச்சில் கிஷன் போல்டானது குறிப்பிடத்தக்கது.