துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான 2025 ஆசியக் கோப்பை போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்ற பிறகு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசிய வார்த்தைகள், ஒவ்வொரு இந்தியரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது. தனது பிறந்தநாள் பரிசாக இந்த வெற்றியைக் கருதாமல், பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இந்த வெற்றியை அவர் சமர்ப்பித்தது, கிரிக்கெட் உலகைத் தாண்டி தேசத்தின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
2025 ஆசியக் கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 15.5 ஓவர்களில் அந்த இலக்கை எட்டியது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் சூர்யகுமார் யாதவ் பேச வந்த போது ரசிகர்கள் "ஹேப்பி பர்த்டே" என்று முழக்கமிட, தனது பேச்சைத் தொடங்கினார் சூர்யகுமார் யாதவ்.
"இது ஒரு அற்புதமான உணர்வு. இந்தியாவிற்கு நான் கொடுக்கும் சரியான பிறந்தநாள் பரிசு இது. ஒரு போட்டியில் வெல்ல வேண்டும் என்று நினைக்கும்போது, அது உங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி வென்ற பிறகு, சொல்வதற்கு வார்த்தைகள் தயாராகவே இருக்கும். நான் நீண்ட நாட்களாக ஒரு விஷயத்தைச் செய்ய நினைத்தேன் - களத்தில் கடைசி வரை நின்று போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டும். அதை இன்று செய்தது மகிழ்ச்சி" என்று தனது ஆட்டம் குறித்துப் பேசினார்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் அழுத்தம் குறித்துப் பேசிய அவர், "எங்கள் அணியைப் பொறுத்தவரை, இது மற்றுமொரு போட்டிதான். எல்லா எதிரணிகளுக்கும் நாங்கள் ஒரே மாதிரிதான் தயாராகிறோம்" என்றார். பின்னர், திடீரென தனது பேச்சின் போக்கை மாற்றிய சூர்யகுமார், மிகவும் உருக்கமான ஒரு செய்தியைப் பதிவு செய்தார்.
"நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இதுதான் அதற்கான சரியான தருணம். பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் முழுமையாகத் துணையாக நிற்கிறோம். நாங்கள் அவர்களுடன் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்."
"இந்த வெற்றியை, எல்லையில் வீரத்தைக் காட்டிய நமது ராணுவப் படைகள் அனைவருக்கும் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். எங்களால் முடிந்தபோதெல்லாம், களத்தில் அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதற்கான காரணங்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் என நம்புகிறேன்" என்று சூர்யகுமார் யாதவ் பேசியபோது, மைதானத்தில் பெரும் கரவொலி எழுந்தது.
மேலும், அணியின் வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், "நான் எப்போதுமே சுழற்பந்து வீச்சாளர்களின் ரசிகன். அவர்கள்தான் ஆட்டத்தின் மிடில் ஓவர்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியே, சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து ஆதிக்கம் செலுத்தும் பாதையைக் காட்டியது." என்றார்.