துபாய்: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ள நிலையில், இளம் வீரர் திலக் வர்மா தனியாளாக நின்று ஒரு வாரியர் இன்னிங்ஸை ஆடி கொடுத்துள்ளார். இதனால் திலக் வர்மாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலமாக அசியக் கோப்பையை 9வது முறையாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் முதல்முறையாக பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, அசால்ட்டாக வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இளம் வீரர் திலக் வர்மா அமைந்துள்ளார். ஏனென்றால் திலக் வர்மா 53 பந்துகள் களத்தில் இருந்து 4 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 69 ரன்களை விளாசி தள்ளி இருக்கிறார்.
இந்திய அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதே திலக் வர்மா களமிறங்கிவிட்டார். தொடக்கத்தில் விக்கெட்டை கொடுத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த திலக் வர்மா, நிதானமாக ரன்களை சேர்த்தார். இதன்பின் 10 ஓவர்கள் வரை அமைதி காத்த அவர், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பவுண்டரி அடிக்க தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் ரன் ரேட் 10 ரன்களுக்கு மேல் தேவைப்பட்ட சூழலில், திலக் வர்மா - சிவம் துபே கூட்டணி மொத்தமாக ஆட்டத்தை கையில் எடுத்து அதிரடியில் தூள் கிளப்பியது. கடைசி நேரத்தில் சிவம் துபே ஆட்டமிழந்தாலும், களத்தில் அசராமல் நின்ற திலக் வர்மா, 3 பந்துகளில் 9 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
கிட்டத்தட்ட சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பெயர் சொல்லும் இன்னிங்ஸை திலக் வர்மா ஆடி இருக்கிறார் என்றே சொல்லலாம். இதற்கு முன்பாக சதங்களை விளாசி இருந்தாலும், திலக் வர்மாவின் இந்த இன்னிங்ஸ் அவர் கிரிக்கெட் காலம் முழுக்க பயணப்படும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் திலக் வர்மா ஒரு வாரியர் இன்னிங்ஸை ஆடி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.