அபுதாபி: உலகின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஷாஹீன் ஆப்ரிடியை நெட்பவுடர் போல் எதிர்கொண்டு இந்திய வீரர் திலக் வர்மா தூக்கி அடித்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்தில் 172 ரன்கள் என்று இலக்கை இந்திய அணி துரத்தியது.
அப்போது பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது இடத்தில் திலக் வர்மா களம் இறங்கினார். முதலில் 17 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 19-வது ஓவரை வீசிய அப்ரிடி பந்துவீச்சில் சிக்ஸர் பவுண்டரி என அடித்து நொறுக்கினார். இதன் மூலம் 19 பந்தில் 30 ரன்கள் எடுத்து திலக் வர்மா பட்டையை கிளப்பினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் இறுதியில் திலக் வர்மா ஆடிய ஆட்டத்தை மறந்து விடக்கூடாது. இந்தியாவின் மற்றொரு நட்சத்திர வீரராக அவர் இருக்கின்றார். குறிப்பாக பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த பவுலரான ஷாகின் அப்ரிடி வலைப்பயிற்சியில் வீசும் சாதாரண பவுலர் போல் எதிர்கொண்டு சிக்சர் பவுண்டரி என அடித்தார்.
இதன் மூலம் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணியின் அபிஷேக் ஷர்மாவும் கில்லும் தொடக்க விக்கெட்டுக்கு பெரிய ஸ்கோர் எடுத்தனர். இதன் மூலம் வெற்றி பெறும் நம்பிக்கையே பாகிஸ்தானுக்கு இல்லாமல் போய்விட்டது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி ஜோடி 105 ரன்கள் குவித்து இருந்தது.
இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் ஷாகின் அப்ரிடி முதல் ஓவர் வரை வீசும் போது அவர் வீசும் முதல் பந்திலேயே அபிஷேக் ஷர்மா சிக்ஸர் அடித்து அவருடைய உத்வேகத்தை குலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்திய அணி வரும் புதன்கிழமை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.