இஸ்லாமாபாத்: 2025 ஆசிய கோப்பை அண்டர் 19 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணிக்கு, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிசு அறிவித்துள்ளார். ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.32 லட்சம் (இந்திய மதிப்பில்) பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்த இறுதிப்போட்டியில் சமீர் மின்ஹாஸ் 172 ரன்கள் குவிக்க, பாகிஸ்தான் 347 ரன்கள் எடுத்தது. 348 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய இந்திய அணி படுமோசமாக சொதப்பி 156 ரன்களில் சுருண்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இதே தொடரின் லீக் சுற்றில் இந்தியாவிடம் 90 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு, இறுதிப்போட்டியில் பழிதீர்த்த பாகிஸ்தான் ஜூனியர் அணி பாகிஸ்தான் திரும்பிய உடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்தில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் அண்டர் 19 அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா 1 கோடி பாகிஸ்தான் ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 32 லட்சம் ரூபாய்) பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார்.
2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் சீனியர் அணி வீழ்த்தியது. அப்போது அந்த அணியின் ஒவ்வொரு வீரருக்கும் இதே அளவு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தற்போது ஜூனியர் அணிக்கும் அதே போல பாகிஸ்தான் அரசு பரிசு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாகிஸ்தான் அண்டர் 19 அணியின் ஆலோசகரும் முன்னாள் கேப்டனுமான சர்பராஸ் அகமது கூறுகையில், "இது தனிப்பட்ட ஒருவரின் சாதனை அல்ல; ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி" என்றார்.
தலைமைப் பயிற்சியாளர் ஷாகித் அன்வர் பேசுகையில், "இதற்கான வேலைகளை கடந்த ஜூன் மாதமே தொடங்கிவிட்டோம். நாடு முழுவதும் திறமையான 70 வீரர்களைத் தேர்வு செய்து, பின்னர் 20 பேரை மட்டும் இறுதியாகத் தேர்ந்தெடுத்துத் தீவிர பயிற்சி அளித்தோம்" எனக் கூறினார்.