துபாய்: அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது.இதனால் ஆட்டம் தலா 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்த சூழலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அண்டர் 19 அணியின் கேப்டன் பர்கான் யூசுப், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் பாகிஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்சி ஆகியோர் களமிறங்கினர்.

முதல் போட்டியில் 171 ரன்கள் குவித்து சாதனை படைத்த வைபவ் சூரியவன்சி இன்று பாகிஸ்தானுக்கு எதிராக பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வைபவ் வெறும் ஒரு பவுண்டரி மட்டும் அடித்த நிலையில் 6 பந்துகளை எதிர் கொண்டு 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
வைபவ் சூரியவன்சி இந்த ஆண்டு யுஏஇ அணிக்கு எதிராக மட்டும் இரண்டு சதம் அடித்திருந்தார். ஆனால் பெரிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து தடுமாறுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. எனினும் ஐபிஎல்,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக வைபவ் ரன்கள் குவித்தாலும் சமீபகாலமாக தான் இந்த பிரச்சனை இருக்கிறது.
எனினும் அவருக்கு வெறும் 14 வயது தான் ஆகிறது என்பதால் அவர் மீது பெரிய எதிர்பார்ப்புகளை வைத்து சுமையை ஏற்ற வேண்டாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் மறுமுனையில் சிஎஸ்கே வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான ஆயுஷ் மாத்ரே பட்டையை கிளப்பி 25 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார். ஆரோன் ஜார்ஜ் 85 ரன்கள் சேர்க்க, இந்திய அண்டர் 19 அணி 240 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 150 ரன்களில் சுருண்டது.