புலவாயோ: ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரேவின் ஆல்-ரவுண்டர் ஆட்டம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி (30) மற்றும் அரோன் ஜார்ஜ் (16) சுமாரான துவக்கம் அளித்தனர். கேப்டன் ஆயுஷ் மத்ரே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அதிர்ச்சி அளித்தது.

இருப்பினும், நடுவரிசையில் வேதாந்த் திரிவேதி பொறுப்புடன் விளையாடி 68 ரன்கள் குவித்தார். அவருக்குத் துணையாக கனிஷ்க் சௌகான் 35 ரன்களும், ஆர்.எஸ்.அம்ப்ரீஷ் 29 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்துல் சுபான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அணி 33.3 ஓவர்களில் 253 ரன்கள் என்ற இலக்கை எட்டினால் மட்டுமே இந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. அப்படி செய்தால் இந்தியா தொடரில் இருந்து வெளியேறும் என்ற நிலை இருந்தது.
ஆனால், பாகிஸ்தான் அணி 33.3 ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை எட்டுவதை விட நிதானமாக ஆடி இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற முடிவை எடுத்தது. அவ்வாறு ஆடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் விழத் தொடங்கின. உஸ்மான் கான் (66) மற்றும் ஹம்ஸா ஜஹூர் (42) ஆகியோர் மட்டும் சற்று நேரம் தாக்குப்பிடித்து விளையாடினர். கேப்டன் பர்ஹான் யூசுப் 38 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி நிதானமாக ஆடி இந்தியாவை வீழ்த்தும் வாய்ப்பு இருந்தது.
ஆனால், அப்போது இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மத்ரே பந்தை கையில் எடுத்தார். பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சில் கேப்டன் ஆயுஷ் மத்ரே விஸ்வரூபம் எடுத்தார். தனது சுழற்பந்து வீச்சால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களைத் திணறடித்த அவர், 8 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குறிப்பாக நன்கு விளையாடிக் கொண்டிருந்த உஸ்மான் கானை அவர் வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. கிலன் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 46.2 ஓவர்களில் 194 ரன்களுக்குச் சுருண்டது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது.