கொழும்பு: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக பல்வேறு யுத்திகளை அமைத்து எளிதாக வெற்றி பெற்றார்.
குறிப்பாக களத்தில் இந்திய அணி வீரர்கள் எப்போதுமே ஹிந்தியில் தான் பேசிக் கொள்வார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு உருது தாய்மொழி என்பதால் அவர்களுக்கு ஹிந்தியும் நன்றாக தெரியும். ஹிந்தியில் புரிந்து கொள்ளும் மொழி புலமை அவர்களிடம் இருக்கின்றது.

இதனால் இந்திய வீரர்கள் ஹிந்தியில் பேசினால் அவர்கள் எளிதில் புரிந்து கொண்டு விளையாடுவார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆங்கில மொழி பெரிய அளவு தெரியாது. இதனால் பாகிஸ்தான் போட்டியில் மட்டும் சூரியகுமார் யாதவ் தனது வீரர்களிடம் ஆங்கில மொழியில் பேசி தான் சொல்ல வந்ததை சொன்னார்.
இதனிடையே, பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், வருண் சக்கரவர்த்தியிடம் பேசிய சில உரையாடல்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் கேப்டன் சூரியகுமார், வருண் சக்கரவர்த்தியிடம் சென்று மச்சான் ஹிந்தியில் மட்டும் பேசு ப்ளீஸ் என்று கூறுகிறார்.
அதற்கு வருண் சக்கரவர்த்தி, எனக்கு இந்தி தெரியாது மச்சி என்று பதில் அளித்துள்ளார். வருண் சக்கரவர்த்தி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஹிந்தி தெரிய வாய்ப்பில்லை. இதனால் அவர் தமிழ் தெரிந்த வீரர்களிடம் தமிழிலும் மற்ற வீரர்களிடம் ஆங்கிலத்திலும் பேசி வருகிறார்.
கேப்டன் சூரியகுமார் ஹிந்தியில் பேசு மச்சான் ப்ளீஸ் என்று கூறியதற்கு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அவர் நகைச்சுவையாக இதை தெரிவித்து இருந்தாலும், தெரியாத மொழியை பேசு என்று சொல்வது எப்படி சரி ஆகும். ஆங்கிலம் இருக்கும் போது ஆங்கிலத்தில் பேசினால் என்ன தவறு என்று பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.