துபாய்: இந்திய அணியுடனான ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு ஃபீல்டிங் முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் பேட்டிங் தங்களிடம் இருந்து ஆட்டத்தை எடுத்து சென்றுவிட்டதாக கூறிய ரிஸ்வான், ஏராளமான தவறுகளை களத்தில் செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ரன்களை விளாசி அபார வெற்றியை பெற்றது.

சிறப்பாக ஆடிய விராட் கோலி 111 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இந்த தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியில் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடைந்த தோல்விக்கும் இந்திய அணி பழிதீர்த்துள்ளது.
இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேசுகையில், நாங்கள் டாஸ் வென்றாலும், அதன் பலன் எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்திய அணியின் பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். நானும், சாவுத் சக்கீலும் கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விளையாடினோம். ஆனால் தவறான ஷாட் தேர்வு விக்கெட்டை பறிகொடுக்க வேண்டியதாகிவிட்டது.
இந்திய அணி எங்கள் மீதான அழுத்தத்தை தொடர்ந்து நீடிக்க செய்தது. ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்தால், 3 துறைகளிலும் சிறப்பாக செயல்படவில்லை என்றே அர்த்தமாகும். அதேபோல் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் இருவரும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போதே எங்களிடம் இருந்து ஆட்டம் சென்றுவிட்டது. நாங்கள் எங்களின் ஃபீல்டிங்கில் முன்னேற்றம் அடைய வேண்டும்.
இந்தப் போட்டியிலும் ஏராளமான தவறுகளை செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் வங்கதேசம் அணியுடனான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும், அரையிறுதி வாய்ப்பு மிகவும் குறைவுதான் என்பது தெரிய வந்துள்ளது.