துபாய்: இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் பிரம்மாண்ட சாதனை படைக்க இன்னும் 15 ரன்கள் தேவை. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் அந்த சாதனையை நிகழ்த்துவாரா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
விராட் கோலி இன்னும் 15 ரன்கள் எடுத்தால் 14,000 ஒருநாள் போட்டி ரன்களை எட்டி சாதனை படைப்பார். மேலும், உலக அளவில் மிக அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைப்பார்.

இதுவரை 298 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 286 இன்னிங்ஸ்களில் 13,985 ரன்கள் அடித்துள்ளார் விராட் கோலி. ஒருநாள் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 57.78 ஆக உள்ளது. 50 சதம் மற்றும் 73 அரை சதங்கள் அடித்துள்ளார்.
விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 15 ரன்களுக்கு மேல் எடுத்தால் 14,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். இதற்கு முன் உலக அளவில் இந்த மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்ககாரா ஆகியோர் மட்டுமே எட்டியுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர், 2006 இல் 350 இன்னிங்ஸ்களில் 14,000 ரன்களை எட்டினார். குமார் சங்ககாரா, 2015 இல் 378 இன்னிங்ஸ்களில் 14,000 ஒருநாள் போட்டி ரன்களை எட்டினார்.
விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினால், அவர் 286 இன்னிங்ஸ்களிலேயே இந்த சாதனையை படைத்திருப்பார். இது உலக சாதனையாகவும் மாறும்.
ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் போட்டி சதங்கள் என்ற சாதனையை முறியடித்து 50 சதங்கள் அடித்துள்ளார் கோலி. அந்த சாதனை 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் போது நிகழ்த்தப்பட்டது. அதே போல சாம்பியன்ஸ் டிராபியில் அவரின் மற்றொரு மைல்கல் சாதனையை கோலி முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சமீபகாலமாக விராட் கோலியின் ஃபார்ம் மோசமாக இருந்தாலும், இந்த மைல்கல் சாதனை அவருக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் அரை சதம் அல்லது சதம் அடிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.