துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் போட்டியில், இந்திய அணியின் எளிதான வெற்றிக்கு காரணமாக இருந்த இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா-வின் ஆட்டத்தை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கொண்டாடி வருகிறது. வெறும் 39 பந்துகளில் 74 ரன்கள் விளாசி பாகிஸ்தான் பந்துவீச்சைச் சிதறடித்து இருந்தார் அபிஷேக். ஆனால், இந்தியாவின் முன்னாள் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் ஒரு விஷயத்தில் அதிருப்தி அடைந்து அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அபிஷேக்குடன் உரையாடிய சேவாக், "உங்கள் இன்னிங்ஸிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன், எப்போது 70 ரன்களைக் கடந்து விடுகிறாயோ, அதன்பிறகு சதத்தைத் தவறவிடாதே. இந்த ஆலோசனையை எனக்கு ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியிருந்தார்" என்று தனது பாணியில் அறிவுரை வழங்கினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 172 ரன்கள் என்ற இலக்கை துரத்தியபோது, அபிஷேக் ஷர்மா ஆறு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்தார். அவர் ஆடிய விதத்தைப் பார்க்கும்போது, ஒரு கட்டத்தில் சதம் அடிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அவர் ஆட்டமிழந்தபோது, 13வது ஓவரிலேயே இந்திய அணி 123 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
அதே நேரத்தில், இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அபிஷேக் ஷர்மா-வின் ஆட்டத்தைக் கண்டு வியந்து பாராட்டியுள்ளார். தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், அபிஷேக் ஷர்மா கிரிக்கெட் உலகை ஆளப்போகும் வீரர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
"அபிஷேக் ஷர்மா, தோனி பாணியில் 'ஹெலிகாப்டர் ஷாட்டுடன்' கலந்த ஒரு 'இன்சைடு-அவுட் கவர் டிரைவ்' அடித்தார். அவர் அடித்த ஐந்து சிக்ஸர்களைப் பற்றி எல்லோரும் பேசுவார்கள், ஆனால் நான் அந்தக் 'கவர் டிரைவ்' பற்றிப் பேச விரும்புகிறேன், ஏனென்றால் அதில் அவ்வளவு நேர்த்தி இருந்தது. ஒரே 'பேட் ஸ்விங்'கில், அவரால் பேட்டிங்கை இவ்வளவு எளிதாக ஆட முடிகிறது என்றால், அந்த பேட்ஸ்மேனை ஏன் தினமும் பார்க்கக் கூடாது?" என்று அஸ்வின் வியந்தார்.
மேலும், "இது அபிஷேக் ஷர்மா-வின் வருகை அல்ல, இது ஒரு தொடக்கம் மட்டுமே. அவருக்கு ஒரு பெரிய எதிர்காலம் உள்ளது. அவர் கிரிக்கெட் உலகை ஆளப்போகிறார், இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். யுவராஜ் சிங் எப்படி இந்தியாவின் தலைசிறந்த வெள்ளைப்பந்து கிரிக்கெட் வீரராக உருவெடுத்தாரோ, அந்த உயரத்தை இவராலும் எளிதாக அடைய முடியும். யுவராஜ் சிங்-இன் வாரிசு இவர்தான் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு அபாரமான திறமைசாலி" என்று அஸ்வின் மனதாரப் பாராட்டினார்.