நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு அருகே வந்து, பின்னர் வரிசையாக விக்கெட்களை இழந்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதை அடுத்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக விளாசித் தள்ளினார். 10 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் இருக்கும் பாகிஸ்தான் அணியில் யாருக்கும் போட்டி சூழ்நிலையை புரிந்து கொள்ளும் தன்மையே இல்லை எனவும், நாம் சரியாக விளையாடா விட்டால் பயிற்சியாளர்களை தான் மாற்றுவார்கள் என்று எண்ணம் இவர்களுக்கு உள்ளது, அதற்கு மாறாக தற்போது பயிற்சியாளர்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த பாகிஸ்தான் வீரர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என வாசிம் அக்ரம் கொந்தளித்தார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்த ஆடிய பாகிஸ்தான் அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் இழந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அதன் பின் வரிசையாக விக்கெட்களை இழந்து தோல்வி அடைந்தது பாகிஸ்தான்.
போட்டிக்கு பின் தங்கள் வீரர்களின் செயல்பாடு குறித்து வாசிம் அக்ரம் பேசுகையில், "இவர்கள் 10 வருடமாக விளையாடி வருகிறார்கள். இவர்களுக்கு நான் பாடம் எடுக்க முடியாது. முகமது ரிஸ்வானுக்கு போட்டி சூழ்நிலையை குறித்த விழிப்புணர்வே இல்லை. பும்ரா கையில் பந்தை கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் விக்கெட் வீழ்த்த சொல்கிறார்கள் என்று அர்த்தம். அதை புரிந்து கொண்டு பும்ராவின் பந்து வீச்சில் கவனமாக ஆடியிருக்க வேண்டும். ஆனால், ரிஸ்வான் பெரிய ஷாட் அடிக்க முயன்று அவரது விக்கெட்டை இழந்தார்."
"இஃப்திகார் அகமத் லெக் திசையில் ஒரு ஷாட் அடிக்க மட்டுமே கற்றுக் கொண்டுள்ளார். இந்த அணியில் அவர் பல ஆண்டுகளாக இருக்கிறார். ஆனால், அவருக்கு பேட்டிங் செய்யத் தெரியாது. ஃபாக்கர் ஜமானுக்கு நான் போட்டி சூழ்நிலை குறித்து சொல்லித் தர முடியாது. பாகிஸ்தான் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாம் சரியாக விளையாடவில்லை என்றால் நமது பயிற்சியாளர்களை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். நமக்கு எதுவும் நடக்காது என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்த முறை பயிற்சியாளர்களை தக்கவைத்துக் கொண்டு ஒட்டுமொத்த அணியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" என வாசிம் அக்ரம் கடுமையாக பேசினார்.
மேலும், பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்கள் பாபர் அசாம் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதில்லை. அதை சுட்டிக்காட்டி அவர்கள் பெயரை குறிப்பிடாமல் விமர்சனம் செய்தார் வாசிம் அக்ரம். "சில வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதில்லை. இது சர்வதேச கிரிக்கெட். நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடுகிறீர்கள். ஆனால், இப்படி செய்வது சரியல்ல. இவர்களை வீட்டிலேயே அமரச் செய்ய வேண்டும்" என்று அவர்களை விளாசினார்.