இஸ்லாமாபாத்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில், இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை மட்டும் புறக்கணிக்கப் போவதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில், ஒருவேளை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் அப்போதும் பாகிஸ்தான் விளையாடாமல் புறக்கணிக்குமா? என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக்கோப்பைத் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இதில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியாவுக்கு எதிரான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் மட்டும் களமிறங்க வேண்டாம் என்று அணிக்கு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், "2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்க பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசு ஒப்புதல் அளிக்கிறது. இருப்பினும், பிப்ரவரி 15, 2026 அன்று இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்காது" என்று பதிவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வங்கதேச அணி, தங்களின் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றக் கோரியது. ஆனால், ஐசிசி இந்த கோரிக்கையை நிராகரித்ததால், வங்கதேச அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டு, ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஐசிசியின் இந்த இரட்டை நிலைப்பாட்டைக் கண்டிக்கும் விதமாகவே பாகிஸ்தான் இந்த புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவு குறித்துப் பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் தனது எக்ஸ் தளத்தில் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்துள்ளார்.
அவர் தனது பதிவில், "குரூப் சுற்று மற்றும் பிளேஆஃப் சுற்றுகளின் அடிப்படையில் இந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் சந்திக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அப்படி ஒரு சூழல் அமைந்தால், உலகக்கோப்பை இறுதிப் போட்டியையும் பாகிஸ்தான் புறக்கணிக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பீட்டர்சனின் இந்தக் கேள்வி, பாகிஸ்தானின் முடிவில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டுவதோடு, கிரிக்கெட் உலகில் புதிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி போட்டியில் விளையாட வராவிட்டால், ஐசிசி விதிகளின்படி இந்திய அணிக்கு வெற்றி வழங்கப்பட்டு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். இது இந்திய அணிக்குச் சாதகமாக அமையும் என்றாலும், கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.