துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக இன்று சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் விளையாடுகிறது. ஏற்கனவே லீக் சுற்றில் இரு அணிகளும் லீக் சுற்றில் மோதியது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்குகிறது. ஆனால் இந்திய அணி தோல்வியை தழுவாமல் மிருக பலத்துடன் உள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஃபோர் சுற்றில் துபாய் ஆடுகளம் எவ்வாறு இருக்கும்.

டாஸ் வென்றால் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று தற்போது பார்க்கலாம். துபாயில் பகலில் கடும் வெப்பம் நிலவுவதால் இரவில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது சிறப்பான முடிவாக இருக்கும். இல்லையென்றால் இரண்டாவது பந்து வீசும் போது அது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிடும்.
நேற்று நடைபெற்ற போட்டியில் கூட வங்கதேசம் அணி 169 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. இதற்கு காரணம் இலங்கை அணி பனிபொழிவில் சரியாக பந்து வீச முடியாமல் போனதுதான். இதேபோன்று இரண்டாவது முறையாக பேட்டிங் செய்யும்போது பந்து நன்றாக பேட்டிற்கு வருகிறது. அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் கூட ஓமன் அணி அபாரமாக ரன் சேர்த்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.
இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவதால் பனிப்பொழிவு நிச்சயம் ஒரு பாதகமான விஷயமாக இருக்கும். இதன் காரணமாக இந்திய அணி டாஸ் வென்றால் முதலில் பந்து வீச வேண்டும். ஒருவேளை இந்தியா பேட்டிங் செய்யும் நிலைமை வந்தால் குறைந்தபட்சம் 200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும்.
இல்லையென்றால் ஓமனுக்கு எதிராக விளையாடியது போல் 180 ரன்களாவது தொட வேண்டும். கில் தொடர்ந்து தடுமாறி வரும் நிலையில், அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும். யாராவது ஒரு வீரர் 20 ஓவர் வரை நின்று விளையாடினால் மட்டுமே அப்படி ஒரு இலக்கை தொட முடியும். இந்தியா முதலில் பந்து வீசும் போது பாகிஸ்தானை 120 முதல் 140 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.